கோலிவுட்டின் முதல் பிரமாண்ட தயாரிப்பாளர் என்ற பெயர் பெற்ற தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் தாணு, அடுத்தடுத்து ரஜினி மற்றும் விஜய் படங்களை தயாரிக்க உள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரில் ஒருவரின் படத்தை தயாரிப்பதே ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய விஷயம். இந்நிலையில் கலைப்புலி தாணு இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படம் வரும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இயக்குனர் ரஞ்சித் தற்போது மலேசியாவில் லொகேஷன் பார்த்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. டான் ஆக ரஜினி நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என தெரிகிறது. சந்தோஷ் நாராயண் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
அதே நேரத்தில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள படத்தை தயாரிக்கும் தாணு, இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்தில் போட்டோஷூட் பணியை ஆரம்பிக்கவுள்ள அட்லி, ஜூலை 20 முதல் படப்பிடிப்பை தொடங்குவார் என தெரிகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.