கங்கனா ரனாவத் கம்பீரமான நடிப்பால் பாலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்தவர். கிடைத்த வாய்ப்புகளில், தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லும் கங்கனாவின் ஆலோசகர், அவரின் சகோதரி ரங்கோலி சண்டல்.
பொலிவூட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான கங்கனா ரனாவத் மனதில் தோன்றியதை தைரியமாக பேசும் துணிச்சல் மிக்க நடிகை. இதனால், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளவும் தவறுவதில்லை என்றாலும், தந்து அந்த இயல்பிலிருந்து எப்போதும் தன்னை மாற்றிக்கொள்ளாத ஒருவர் இவர்.
கங்கனா ரனாவத் இவ்வாறு வெளிப்படையான, துணிச்சல் மிக்க நடிகையாக இருப்பதற்குக் காரணம் அவரது சகோதரியான ரங்கோலி சண்டல். பொதுவெளியில் அதீத பாதிப்பை எதிர்கொண்டு தனது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட ரங்கோலி சண்டல், நடிகை கங்கனா ரணாவத்தின் ஆலோசகராக இருப்பது எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை கங்கனா ரணாவத்திற்குக் கொடுத்திருக்கின்றது.
கங்கனா நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் அந்தப் படங்கள் குறித்த விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடும் ரங்கோலி, அவ்வப்போது தனக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை தவறவிடாமல் பொதுக் கருத்துக்களை எவ்வித தயக்கமும் இன்றி தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், தான் எதிர்கொண்ட எரிதிராவக வீச்சு மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி குறிப்பிடுகையில், "நான் கல்லூரியில் படிக்கும்போது ஒருவன் என்னிடம் காதலைத் தெரிவித்தான். அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பரிசாக என்மீது ஆசிட்டை ஊற்றினான். என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள், என் வாழ்க்கை முழுவதும் நிலை குலைந்துவிட்டது. உடம்பின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.
சில அறுவைசிகிச்சைகளுக்குப் பின் கண் விழித்து என் முகத்தை பார்த்து நானே பயந்தேன். ஏழு மாதங்கள் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். என்னுடைய சகோதரி என்பதற்காக கங்கனாவும் தாக்கப்பட்டாள். ஒருவரின் காதலை ஏற்றுக்கொள்ளாதது அவ்வளவு பெரிய குற்றமா? என்னுடைய உடல் உறுப்புகளைச் சரிசெய்ய ஐந்து வருடங்களில் 54 அறுவைசிகிச்சைகளைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அப்போதுகூட மருத்துவர்களால் என்னுடைய காதை சரிசெய்ய முடியவில்லை.
எனது உடற்பாகங்களில் கண், மார்பு, கழுத்து பகுதிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டன. என் மார்புப் பகுதியைச் சரிசெய்ய உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து சதையை வெட்டியெடுத்து பொருத்தினார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு என் குழந்தைக்கு பாலூட்ட என்னால் முடியவில்லை. என் ஒட்டுமொத்த குடும்பமும் மனவேதனையிலிருந்து இப்போதுதான் வெளிவர ஆரம்பித்திருக்கிறது.
என்மீது எரிதிராவகம் வீசியவன், சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான். குற்றம் செய்தவனுக்கு ஒரு மாதம் தண்டனை. ஆனால், பாதிக்கப்பட்ட எனக்கு வாழ்நாள் முழுவதும் தண்டனை. இதுதான் இப்போதைய சமூக நிலையாக இருக்கிறது. என்னைப்போல் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை. நியாயம் தேடி காவல் நிலையங்களுக்கு மாறி மாறி நடந்தும் நாம் தான் ஏமாற்றமடையும் நிலை உள்ளது.
என்னைத் தண்டித்தவனை, நான் தண்டிக்க வேண்டும் என்பதைவிட, இப்போது என் குடும்பத்தின் நிம்மதியே எனக்குப் பெரிதாக இருக்கிறது. அதனால், நான் பாதிக்கப்பட்ட வழக்கு பற்றிக் கவலைப்படுவதில்லை. என்னைப் பார்ப்பவர்கள், நான் என் அழகை இழந்ததற்காக வருந்துகிறார்கள். நம்முடைய கண்முன் உடலின் மொத்த அழகும் கரைந்து ரத்தத்துடனும், வலியுடனும் உருகும்போது, அழகு பெரிசாகத் தெரியாது. நான் இப்போது, என்னுடைய மனவலிமையை நினைத்துப் பெருமைப்படுகிறேன். என் மனவலிமையைத்தான் என்னுடைய அழகாகப் பார்க்கிறேன். கங்கனாவைப் பார்க்கும் பலரும், ‘அவள் மிகத் தைரியமான பெண்ணாக இருக்கிறாள்’ என்பார்கள். அவளின் தைரியத்திற்கு நான் அனுபவித்த வலிகளும் ஒரு காரணம்“ என்று பதிவிட்டிருக்கின்றார் இந்த இரும்பு மனத்துக்காரி.