காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான ஆவணங்களை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தி, பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வின் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரியவுக்கு பொதுநலவாய நாடுகளால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் டொலர்கள் நிதியை, காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிற போதும், இதனை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
தற்போது நல்லாட்சிக்கான நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.
இனிதான் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.