நாம் எமது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட பணத்தொகையில் குறிப்பிட்ட ஒரு தொகையை தானியங்கி இயந்திரத்தினூடாக மீளப்பெற விரும்பின், ATM இயந்திரத்தில் கேட்கப்படும் தரவுகளை சரியாக வழங்குவதோடு எமக்கு வேண்டிய தொகையையும் குறிப்பிட்டால், குறித்த சரியான பணத்தொகை எமது கைகளை வந்தடையும் வகையில் தான் ATM இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், நாம் கேட்ட தொகையை விட அதிகமாகவும் அதே வேளை, மேலதிகமாக கையில் கிடைத்த தொகை எமது வங்கி வைப்புக் கணக்கில் இருந்து குறையாமலும் இருந்தால்.......???
இந்தியாவின் சேலம் மாவட்டத்தின் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் தான் இப்படி ஒரு சந்தோசத்தை, ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு குறித்த வங்கியின் ATM இயந்திரம் வழங்கியிருக்கின்றது. அண்மையில், குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் காலை நேரத்தில் ATM இயந்திரத்தில் தனக்கு தேவையான பணத்தை மீளப்பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, 200 ரூபா தாளுக்கு பதிலாக, 500 ரூபா நாணயத் தாள்கள் அவரது கைகளில் கிடைத்தன. இந்த விடையம், அவரைத் தொடர்ந்து பணம் மீளப்பெற வந்திருந்தவர்களுக்கும் தெரியவந்த நிலையில், குறித்த செய்தி காட்டுத் தீ போன்று ஏனையோருக்கும் மிக வேகமாகப் பரவியிருந்தது.
விஷயத்தை அறிந்தகொண்ட அந்தப் பிரதேசத்திலுள்ள ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் பலர், போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கணக்கில் உள்ள பணத்தை குறித்த ATM இயந்திரத்தின் மூலம் மீள எடுப்பதற்கு முண்டியடித்ததுடன், இந்தப் போட்டியில் இறங்கிய கொஞ்சப்பேர் அதிர்ஷ்டசாலிகள் ஆகினர். இந்தநிலையில், இதுபற்றிய தகவல் அறிந்துக்கொண்ட ஸ்டேட் வங்கி உத்தியோகத்தர்கள் உடனடியாக அந்த ATM இயந்திரத்தை மூடியதுடன், வாடிக்கையாளர்கள் பணம் மீள பெறுவதற்கும் தடை விதித்தனர்.
இது இப்படியிருக்க, 200 ரூபா நாணயத்தாள்களை வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபா நாணயத் தாள்கள் தவறுதலாக வைக்கப்பட்டமையினாலேயே இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் வாடிக்கையாளர்களின் கணக்கிலுள்ள பணத்தில் வங்கி கை வைக்காது என்றும், வங்கிக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு, ATM இயந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பை ஏற்று நடத்தும் தனியார் நிறுவனமே பொறுப்பு கூற வேண்டுமென்றும் இந்திய ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.