ஜப்பானில் புகுஷிமாவில் 50 வயது கடந்த ஒருவர் நேற்று மூளைச்சாவு அடைந்துள்ளார் . அவரது இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்திக்கொள்ள அவரது குடும்பத்தினர் சம்மதம் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரது இதயத்தை அகற்றி, டோக்கியோவில் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவருக்கு பொருத்த முடிவானது. உடனே வைத்தியர்கள் அவரது இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
அந்த இதயத்தை விரைவாக கொண்டு போய்ச்சேர்ப்பதற்காக பொலிஸ் உலங்கு வானுர்தி ஒன்றில் எடுத்துச்சென்றுள்ளனர். அந்த உலங்கு வானூர்தியில் 3 பொலிஸ் அதிகாரிகள், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், 2 மருத்துவ பணியாளர்கள் என 7 பேர் பயணித்துள்ளனர்.
ஆனால் அந்த உலங்குவானூர்தி எதிர்பாராத விதமாக கொரியாமா என்ற இடத்தில் உள்ள நெல் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது உலங்கு வானூர்தியில் பயணம் செய்த 7 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. டோக்கியோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் நடைபெறவிருந்த இதய மாற்று அறுவை சிகிச்சை ரத்தானது.