திரைத்துறைப் பிரபலங்களின் அகால மரணச் சம்பவங்கள் அடிக்கடி பரபரப்புச் செய்திகளாக வெளிவந்து ரசிகர்களின் மனங்களில் கவலையை ஏற்படுத்த தவறுவதில்லை. அண்மையில் நிகழ்ந்த வட இந்திய திரைத்துறைப் பிரபலமொன்றின் மரணம் பற்றிய பேச்சுக்கள் அடங்கும் முன்னர், இப்படியானதொரு சம்பவம் மீண்டும் நடந்தேறியுள்ளது.
கன்னடத் திரைத்துறையின் பின்னணிப் பாடகியான 26 வயதுடைய சுஸ்மிதா ராஜன் கடந்த வருடமே திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையின் சந்தோஷப் பயணத்தில் காலெடுத்து வைத்திருந்த நிலையில், வரதட்சணை எனும் கொடுமையினால் உயிரையே தொலைத்த அவலம் நடந்து முடிந்துள்ளது.
கணினி மென்பொருள் பொறியியலாளரான சரத்குமார் என்பவரை கரம்பற்றிய சுஸ்மிதா ராஜனுக்கு, புகுந்த வீட்டின் பணப் பித்து காரணமாக திருமண வாழ்க்கை இனித்திருக்கவில்லை. ஆரம்பம் முதலே குழப்பங்களும் தகராறுமாகவே வாழ்க்கை நகர்ந்த நிலையில், தனது பிறந்த வீட்டிற்கு வந்து சேர்ந்த சுஸ்மிதா ராஜனின் மனதில் வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக மன அமைதியின்மையை காணப்பட்டது.
இந்த நிலையில், எதிர்காலம் தொடர்பில் எழுந்த விரக்தி காரணமாக மன அழுத்தம் அதிகரித்தமையினால் தனது அறையை பூட்டிக்கொண்டு தனிமையில் இருந்த சுஸ்மிதா ராஜன், தவறான முடிவினை எடுத்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னர் தனது மரணம் குறித்த கடிதம் ஒன்றை தனது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பிய பின்னரே அவர் தனது மரணத்தை தேடிக்கொண்டார்.
வரதட்சணை கொடுமையால் கணவரது பெரிய தாய் மற்றும் சகோதரியுடன் முரண்பட்டுக்கொண்டதோடு, கணவருடனும் ஏற்பட்ட தகராறு காரணமாக உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்ட சுஸ்மிதா தாய் வீடு திரும்பியும் மன அமைதியின்மையால் அவஸ்தை கொண்டு தான் எழுதிய கடிதத்தை 'வாட்ஸ்அப்' செயலி மூலம் தந்து தாயாருக்கு அனுப்பியிருந்தார். அதில், "அம்மா என்னை மன்னித்துவிடு. நான் செய்த தவறுக்கு நானே தண்டனை அனுபவித்து விட்டேன். எனது கணவர் அவரது பெரியம்மா வைதேகியின் பேச்சை கேட்டு தொடர்ந்து வரதட்சணை தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு கணவனின் சகோதரி கீதாவும் காரணம். அனை வரும் ஒன்று சேர்ந்து என்னை மனதளவிலும், உடல் அளவிலும் வேதனைப்படுத்தி விட்டனர்.
பல முறை நான் அவர்களின் காலில் விழுந்தும் என்னை விடவில்லை. இந்த கொடுமை தாங்காமல் அவர்கள் வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. பிறந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டால் தான், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கருதி நான் நமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டேன். இந்த விபரீத முடிவால் நான் உனது அன்பை பெற முடியாதவளாகி விட்டேன்.
என்னுடைய இந்த தற்கொலைக்கு காரணமான அவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும். இறுதியாக உங்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னை நமது சொந்த ஊரிலேயே புதைத்து விடுங்கள். இல்லையென்றால் எரித்து விடுங்கள். ஆனால் என்னை வேதனைப்படுத்தியவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள்" என்று தனது மனதின் வேதனையை கொட்டித் தீர்த்துவிட்டே நிரந்தரமாக விடைபெற்றிருக்கின்றார் சுஸ்மிதா ராஜன்.