உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டறியும் ஆய்வு பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது.
ரோம் நகரில் உள்ள ஸ்பாலன்சானி என்ற தொற்று நோய்த் தடுப்பு மருத்துவமனை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.டக்கீஸ் என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பாலன்சானி மருத்துவமனையில் சில மாதங்களாக கொரோனா நோய் தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் தான் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லுகி என்பவர் தெரிவித்துள்ளார். எலிகள் மீது நடத்தப்பட்ட இந்த சோதனை நல்ல பலனை அளித்துள்ளது. முதல் தடுப்பூசிக்கு பிறகு எலிகளின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரித்து இருப்பது உறுதியாகி உள்ளது. ஐந்து எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் சிறந்த முடிவுகளை அளித்த 2 எலிகளிடம் 2ம் கட்ட சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர். அடுத்த ஓரிரு மாதங்களில் கொரோனா நோய் தடுப்பு மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்ய இருப்பதாக இத்தாலி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான டக்கீஸ் தெரிவித்துள்ளது.