முன்னணி நடிகர்களின் பல படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடனமாடிப் புகழ் பெற்றவர் நடிகை முமைத்கான்.
இவர் கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்ற ''என் பேரு மீனா குமாரி'', வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெற்ற ''நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே'', போக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்ற ''என் செல்லப் பேரு ஆப்பிள்'' போன்ற பாடல்களில் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் நடிகை முமைத்கான் மீது, வாகன சாரதி ஒருவர், காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். கோவாவுக்கு தனது வாடகை காரில் பயணித்து 8 நாட்கள் தங்கியதாகவும், வீடு திரும்பியதும் தனக்கான கொடுப்பனவை நடிகை முமைத்கான் வழங்காது மோசடி செய்ததாகவும், குறித்த முறைப்பாட்டில் வாகன சாரதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவி வந்தது. இதனை அடுத்து ஐதராபாத் மேற்கு பகுதியில் உள்ள புஞ்சகட்டா காவல்நிலையத்தில் நடிகை முமைத்கான், குறித்த வாகன சாரதி மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த வாகன சாரதிக்கு கொடுக்க வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் தான் உரிய நேரத்திலேயே வழங்கியதாகவும், எனினும் தன் மீது வாகன சாரதி போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளதாகவும் தெரிவித்து நடிகை முமைத்கான் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.