இந்தியாவிலுள்ள பல பகுதிகளில் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது, தற்போது அதிகரித்த வண்ணமுள்ளது.
இது குறித்து திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகை ராதிகா, தமன்னா, நயந்தாரா உள்ளிட்ட பலர் இந்த சம்பவங்களுக்கு தமது கண்டனங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா தனது எதிர்ப்பை சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவத்தை அடுத்து அதே மாநிலத்தில் 22 வயது பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து நடிகை ஆண்ட்ரியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஆண்கள் எப்போதும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள பல ஆண்கள் இரக்கமில்லாது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கோரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்த செய்திகளை கேட்கும் போது, ஆண்கள் மீதுள்ள மதிப்பு இல்லாமலேயே போகிறது. எனவே ஆண்கள் முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என, நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, தனது சமூக வலைதளத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
இவரது கருத்துக்கு தற்போது பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.