கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்கு தம்மை உட்படுத்திக்கொண்ட நடிகர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த், திடீரென பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டமை காரணமாக அவர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்தது.
இந்த நிலையில், அவருக்குத் தேவையான சிகிச்சைகளையும் மருத்துவ கண்காணிப்பையும் மேற்கொண்டுள்ள குறித்த பிரபல மருத்துவமனை, நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனைகளின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு குருதியழுத்த வித்தியாசம் ஏற்ப்பட்டதாலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும், அவர் நலமாக இருப்பதாகவும், சிறப்பான மருத்துவ கண்காணிப்பை தமது மருத்துவமனையின் வைத்தியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன் அவரை தொந்தரவு செய்யும் வகையில் நலவிரும்பிகள் மற்றும் ரசிகர்கள் மருத்துவமனைக்கு வருகை தர வேண்டாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது இப்படியிருக்க, தனது நண்பன் ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் வீடு திரும்ப வாழ்த்துவதாக நடிகரும் "மக்கள் நீதி மய்யம்" கட்சியின் தலைவருமான 'உலகநாயகன்' கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.