உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுலி கங்கா ஆற்றில் கலந்தது. உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், அதில் பணி புரிந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.
இந்த அனர்த்தத்தில் ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அந்த மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் வெளியிட்டார். இதனிடையே நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதென கூறப்படுகிறது.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை, இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை முதலில் காவல்துறையினர் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் வரை 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதுடன், அப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த அனர்த்தத்தில் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.