எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்தன.
கடந்த முறையைப் போல இம்முறையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதன்படி ராஜபக்ஷ குடும்பத்தில் 4 பேரும் , மாத்தளையில் அலுவிஹார குடும்பத்தினர் 2 பேரும் , கம்பஹாவில் ரணதுங்க குடும்பத்தினர் 3 பேரும் , பொன்சேகா குடும்பத்தினர் 2 பேரும் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் தந்தையும் , மகனும் தேர்தலில் போட்டியிடுவதும் பதிவாகியுள்ளது.
அது எஸ்.பி. திஸாநாயக்க அவரது மகன் மற்றும் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோருமாகும்.
இதேபோல் கணவனுக்கு பதிலாக மனைவிகள் சிலமாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். சரண குணவர்தவின் மனைவி மற்றும் நெரஞ்சன் விக்கரமசிங்கவின் மனைவியுமே அவர்கள் ஆவர்.
ஹம்பாந்தோட்டையில் சமல் , நாமல் , நிருபமா ராஜபக்ஷக்கள் போட்டியிடுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ குருநாகலில் களமிறங்குகிறார்.
பிரசன்ன, அர்ஜூன மற்றும் ருவன் ரணதுங்கக்கள் கம்பஹாவில் போட்டியிடுகின்றனர். இவர்கள் சகோதரர்கள் என்பது ஊரறிந்த விடயம்.
மாத்தளையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் வசந்த அலுவிஹாரக்கள் ஐ.தே.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.
இதேபோல் தினேஷ் குணவர்தன - கீதாஞ்சன குணவர்தன, மஹிந்த யாபா அபேவர்தன - லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதேபோல் ரணில் மற்றும் ருவன் விஜேவர்தன ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
சரத் பொன்சேகா மற்றும் அனோமா பொன்சேகா ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதேபோல் ஐ.தே.கவில் தேசிய அமைப்பாளர் தயா கமகேவின் மனைவி அநோமா கமகே ஐ.தே.கவின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.