ஐ.பி.எல் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரஸ்யமோ அவ்வளவுக்கு சர்ச்சையும் நிறைந்தது. அளவுக்கு அதிகமான எதுவும் ஆபத்தும் , சிக்கலும் நிறைந்த து என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
கனவான்களின் விளையாட்டென என நம்பப்படும் கிரிக்கெட்டின் ஆணிவேரை அசைத்துப் பார்த்தத்தில் , அதன் போக்கை திசை திருப்பியதில் ஐ.பி.எல் தொடருக்கு பெரும் பங்குண்டு.
முற்றிலும் வர்த்தகமயான 'கிரிக்கெட் தொடர்' என ஐ.பி.எல்லை கூறமுடியும். அம்பானி , சாருக்கான் என அனைவரும் முதலிட்டு களம் கண்ட தொடர் இது.
இரவு நேர போட்டி பணம், கவர்ச்சி , ஆட்டம் , பாட்டம் , போட்டியின் பின்னரான விருந்து என பல சமாச்சாரங்களைக் கொண்டது இந்த ஐ.பி.எல்.
பல அணிகள் விளையாடும் இத்தொடரில் எம்மில் பலருக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ்தான்.
அதிக தடவை கிண்ணத்தை வெற்றிகொண்ட அணி என்ற காரணத்துக்கு அப்பால் சென்னை என்றவுடன் தமிழர்கள் என்ற ஈர்ப்பு வருவதாலோ என்னமோ, பல தமிழர்கள் இந்த அணிக்கு ஆதரவளிக்கின்றனர். (விமர்சனம் செய்வோரும் உள்ளனர்)
இந்தியாவில் மாநிலங்களுக்கிடையிலான போட்டியாக இது பார்க்கப்படுவதுண்டு. அதனால் தமிழ் நாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக இதனைக் கூறமுடியும்.
இலங்கையிலும் தமிழர்கள் பலர் இவ்வணிக்கே ஆதரவளித்து வருகின்றமையை சமூக ஊடகங்களில் காணமுடியும்.
மேலும் இலங்கை அணியின் தமிழ் வீரர் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் சென்னைக்கு விளையாடியள்ளமை இங்கு குறிப்பிட த்தக்கது.
இவற்றை விட சென்னையை சொன்னவுடனேயே சிலருக்கு என்.ஸ்ரீனிவாசனை ஞாபகம் வருவதை மறுக்கமுடியவில்லை.
அவர் தொடர்பான சர்ச்சையை அடுத்த ஐ.பி.எல் தொடர் வரை எழுதிக்கொண்டே இருக்கலாம் எனவே அதனைத் தேடிப்பார்க்கும் வேலையை உங்களிடமே விட்டு விடுகின்றோம்.
ஐ.பி.எல் தொடர் மீது நீண்ட நாட்களாக சூதாட்ட மற்றும் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்த நிலையில் இன்று ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்களுக்கு பேரிடியாக ஒரு செய்தி வந்துள்ளது.
ஆம் , ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஆர். எம்.லோதா குழு இத்தடையை விதித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய நீதிபதி லோதா தலைமையிலான குழு இன்று ஐ.பி.எல். ஆட்டநிர்ணய விவகாரத்தில் ஈடுபட்டோருக்கான தண்டனை விவரங்களை அறிவித்தது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 2 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது விசாரணைக்குழு.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஐ.பி.எல். கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகாலத்துக்கு தடை விதித்துள்ளது நீதிபதி லோதா குழு.
இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இனி 2 ஆண்டுகாலங்களுக்கு விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளது.
ஐ.பி.எல் வரலாற்றில் இதை முக்கியமான தீர்ப்பொன்றாக கருதமுடியும், எனினும் கார் விபத்து வழக்கில் சிக்கி வெளியே வந்துள்ள சல்மான் கான் , சொத்து விவகாரத்தில் வழக்கை உடைத்து வெளியே வந்த தமிழக முதல்வர் 'அம்மா' என்றழைக்கப்படும் ஜெயலலிதா , அடிக்கடி சிறையிலிருந்து வெளியே வந்து செல்லும் சஞ்சே தத் போன்றோரும் அதே நீதித்துறையாலேயே தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.