இம்முறை தேர்தலில் வேட்புமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஒரு சிலருக்கு வேட்புமனு வழங்கப்படாத அதேவேளை ஒரு சிலருக்கு வழங்கப்பட்டுள்ளமையானது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
வேட்புமனு கிடைக்காதவர்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தினை ஈர்த்துள்ளவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா ஆவார்.
இவ்விடயம் தொடர்பாக எமது சகோதர செய்திச் சேவையான ஹிரு கொசிப்புக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு:
கேள்வி: இம்முறை வேட்புமனு வழங்கப்படாதது ஏன்?
பதில்- அதைத் தான் நானும் யோசிக்கிறேன். பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுத்து , எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பலர் முயற்சி எடுத்தனர்.
அதற்கான முதல் காரணம் விருப்பு வாக்கு தொடர்பிலான போட்டி. இரண்டு பேச்சுக்கு இடமில்லை, வேட்புமனு கிடைத்தால் கூட்டமைப்பில் , சுதந்திரக் கட்சியில் அதிக விருப்பு வாக்குகளை நானே பெறுவேன். இம்முறை வேட்புமனு வழங்கப்பட்ட முறையில் என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எனது அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்தொன்றென்பது சாதாரண அறிவு கொண்ட அனைவருக்கும் தெரியும்.
கேள்வி: இவ்வளவு ஏழைகளுக்கு உதவி வழங்க பணம் எங்கிருந்து வந்தது? அது தொடர்பிலும் பலர் சந்தேகப்படுகின்றனர்?
பதில்- எனது குடும்ப வியாபாரத்தில் சமூக நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தே இதனைச் செய்கிறேன். அது தொடர்பிலான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் இன்றும் அந்த நிறுவனங்களில் உள்ளன. அதை நான் சி.ஐ.டியிலும் சமர்ப்பித்தேன்.
கேள்வி: அப்படியென்றால் போதைப்பொருள் விற்ற பணம் என்பது பொய்யா?
பதில்- பொறாமை பிடித்த சிலருக்கு பணத்தை போதைப்பொருளால் மட்டுமே ஈட்டமுடியும் என்ற நம்பிக்கையே உள்ளது. ஒழுங்கான வியாபார திட்ட அறிக்கையை வங்கியில் சமர்பித்து வங்கிக் கடனை பெற்று வேண்டியளவு முதலீடு செய்யமுடியும்.எனது தந்தை அனுபவம் மிக்க கணக்காய்வாளராக இருப்பது எங்கள் குடும்பத்தின் பலம்.
கேள்வி: இப்போதும் உங்கள் மீது கொலை வழக்கு , 'வெலே' சுதாவுடன் பணப்பரிமாற்றும் மேற்கொண்ட தாக குற்றச்சாட்டு ஆகியன உள்ளதே?
பதில்- எனக்கு தெரிந்த 'வெலே' சுதா எவரும் இல்லை. நான் நினைக்கிறே அம்மனிதர் பொலிஸை திசை திருப்ப சொன்ன விடயமாகும். எனக்கு எதிரானவர்கள் அவரிடம் அவ்வாறு சொல்லச் சொன்னார்களோ தெரியாது.கொலைவழக்கு நீதிமன்றில் இருப்பதால் நான் அது தொடர்பில் பேச விரும்பவில்லை. தலைக்கு குண்டடிபட்டதால் எனக்கு நடந்தது ஞாபகம் இல்லை. எனக்கு சாட்சிகள் மூலமாகவே அது தெரியும்.
கேள்வி: அப்படியென்றால் இப்போது எழும் குற்றச்சாட்டுக்கள்?
பதில்- அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்போரால் என்னைப் போல 10 மடங்கு உதவி செய்யமுடியும். ஆனால் அவற்றை செய்யமாட்டார்கள் காரணம் கறுப்புப் பணம். சட்டவிரோதமாக உழைப்போர் வெளிப்படையாக சமூகசேவை செய்யமாட்டார்கள், ஏனெனில் தம்மிடம் உள்ள பணம் கறுப்புப் பணம் என்ற உண்மை வெளிவரும் என்பதாலாகும்.
கேள்வி: அப்படியெனில் பணம் உழைக்க அரசியலுக்கு வரவில்லையா?
பதில்- ஒரு சதமேனும் உழைக்கவில்லை. பணம் ஈட்டும் திட்டங்களில் நான் என்னை இணைத்துக்கொள்ளவில்லை. உழைக்காமையாலேயே இதற்கு எதிரானவர்கள் போதைப் பொருள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அரசியலுக்கு வரும் போது இருந்ததற்கு மேலதிகமான சொத்து எதுவும் என்னிடம் இல்லை.
கேள்வி: கொலன்னாவையில் போதைப்பொருள் தொடர்பில் உங்களுக்கு சம்பந்தம் எதுவும் இல்லையா?
பதில் - கொலன்னாவையில் போதைப்பொருள் வர்த்தகம் 1990 களில் ஆரம்பித்துள்ளது, நான் அங்கு ஏற்பாளரானது 2009 இலேயே. அதன்பின்னர் இரண்டரை வருடம் சுகயீனமுற்று வெளிநாட்டில் இருந்தேன்.
கொலன்னாவை குற்றவாளிகள் தொடர்பில் நான் பொறுப்பேற்க தேவையில்லை. எனக்கு அவர்களின் அதர்ம செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூற முடியாது.
கேள்வி: இப்பொழுது கட்சி மாற போகிறீர்களா?
பதில்- இல்லை, அவ்வாறான யோசனை ஏதும் இல்லை.
கேள்வி: அப்படியென்றால் அரசியலை கைவிடப்போகின்றீர்களா?
பதில்- இல்லை. அப்படி செய்யப் போவதில்லை. நான் இன்னும் இளைஞன் . எனக்கு நல்ல மக்கள் செல்வாக்கு உள்ளது. இன்றும் எனது வீட்டுக்கு , அலுவலகத்துக்கு மக்கள் வருகின்றார்கள். அவர்கள் எனக்கு நடந்த விடயத்துக்கு மிகவும் கவலையாக உள்ளார்கள்.