இஸ்லாமிய மக்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பது பெருமகனார் நபிகள் நாயகத்தின் போதனை. இந்த கோட்பாடுகளை ஜாதி மதங்களைக் கடந்து அன்பினை அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
உலகெங்கும் ஜாதி, மதம், இனம், கலாசாரம் எனப் பலவற்றின் பெயரால் நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளவும் பூமிப் பந்தெங்கும் மனித நேயம் மலரவும், இந்த ரமலான் திருநாளில் சூளுரை ஏற்போம்.
அண்ணல் நபிகள் நாயகத்தின் போதனை நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் அனைத்து சமூகங்களிடையேயான ஒற்றுமை நீடித்து நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம். அத்தோடு, நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும், ஒவ்வொரு இஸ்லாமியனும் மார்க்கத்தின் நடைமுறைப்படி ஒழுகவும் போதிக்கிறது இந்த திருநாள்.
எனவே, நாளைய தினம் இலங்கையில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ள அத்தனை இஸ்லாமிய உறவுகளுக்கும், முதல்வன் சூரியனின் புனித நோன்புப் பெருநாள் நல வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்