13 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஹ்ரித்திக் ரோஷன்-சுசான் தம்பதி விவாகரத்துப் பெறுவதாக அறிவித்துள்ளார்கள்.
ஹிந்தி முன்னணி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கும் பழம்பெரும் ஹிந்தி நடிகர் சஞ்சய் கான் மகள் சுசானுக்கும் கடந்த 2000மாவது ஆண்டில் திருமணம் நடந்தது.
ஹிந்தி திரையுலகமே போற்றும் அளவுக்கு கருத்தொற்றுமை மிக்க கணவன் மனைவியாக இவர்கள் வாழ்ந்தார்கள். இல்லற வாழ்வின் பயனாக ஹீரே,ஹிருதான் என்ற இரு மகன்களை பெற்றெடுத்தார்கள். அவர்களுக்கு இப்போது முறையே 7 மற்றும் 5 வயதாகிறது.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள் என்ற செய்தி கசிய ஆரம்பித்தது. இதை உறுதிப்படுத்தவது போல எப்போதும் எந்த விழாவாக இருந்தாலும் இணைந்தே வலம் வரும் இந்த தம்பதிகள் தனித்தனியாக வர ஆரம்பித்தார்கள், சுசான் பொது விழாக்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு
ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷனின் 64வது பிறந்த நாளுக்கு தாமதமாக வந்த சுசானே, வந்த சிறிது நேரத்திலேயே கிளம்பி விட்டார். இந்த சம்பவம் இருவரும் பிரிந்து வாழ்வதை உறுதி செய்தது. அதன் பிறகு கிரிஷ் 3 படத்தின் எந்த நிகழ்ச்சியிலும் சுசான் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய ஹ்ரித்திக் ரோஷன் “எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னைவிட்டு பிரிய சுசான் முடிவு செய்துவிட்டார். அவரின் முடிவு எங்கள் குடும்பத்தை வருத்ததில் ஆழ்த்திவிட்டது” என்று கூறினார்.
ஆனால் இதனை சுசானேவின் தந்தை சஞ்சய்கான் மறுத்துள்ளார். “எல்லா குடும்பத்திலும் இருப்பதை போல அவர்கள் இருவருக்கும் சிற்சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான். இருவரும் பிரிய முடிவு செய்யவில்லை. அவர்கள் நன்கு படித்தவர்கள் நல்ல முடிவையே எடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஏனைய ஹிந்தி நட்சத்திரங்களின் விவாகரத்துக்களைப் போல இந்த விவாகரத்துக்கு வேறு நடிக,நடிகையர் காரணமில்லை என்பது ஆறுதலான விஷயமே.