டெல்லியில் உள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் கட்டிடம் தாக்கப்பட்டமை தொடர்பில் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் சஹாரியார் கானுக்கும், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சஷாங் மனோகருக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவிருந்தது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருக்கான இறுதி முடி இதன் போது எடுக்கப்படும் என்று எதிபார்க்கப்பட்டிருந்தது.
எனினும் சிவ சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர் சந்திப்பு நடைபெறவிருந்த அலுவலத்தில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் அலீம் தார் இந்திய தென்னாபிரிக்க போட்டியிலிருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார். சிவ சேனா அமைப்பின் எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்தே ஐ.சி.சி இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இதேவேளை பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஞாயிறு , மும்பையில் நடைபெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டியில் வர்ணணை வழங்குவதிலிருந்து விலகுவதற்கு வசீம் அக்ரம் , சொய்ப் அக்தார் ஆகியோர் முடிவுசெய்துள்ளனர்.
இதேவேளை, அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள 20க்கு20 உலக கிண்ண கிரிக்கட் தொடரை பாகிஸ்தானின் கிரிக்கட் வீரர்கள் புறக்கணிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் சாஹீர் அபாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு விரோதமாக, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.