பிள்ளைகளோடு தீபாவளி கொண்டாடும் ஹன்சிகா!!!!!
தமிழில் கொடிகட்டிப்பறந்த ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை குஸ்பு. திரையுலகில் ரசிகர்கள் கோவில் கட்டிக்கொண்டாடிய ஒரே நடிகையும் இவர் தான். குஸ்புவிற்கு பின்னர் அவரது சாயல் கொண்டவரும் தற்போது திரையுலகில் கால் பதித்து சில வெற்றிப்படங்களிலும் நடித்தவர், "சின்னக்குஸ்பு" என பெயரும் எடுத்தவர் நடிகை ஹன்சிகா.மற்ற நடிகைகளில் சற்று மாறுபட்ட குணாதியசம் கொண்டவரும் கூட.
சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை தமது பிறந்தநாளை அவரவர் வசதிக்கேற்ப ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். ஆனால் ஹன்சிகா கொஞ்சம் வித்தியாசமாக, தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம்.
தற்போது வரை 30 குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார். அந்தக்குழந்தைகளுக்கான உணவு, தங்கும் இடம், படிப்பு செலவு என எல்லாவற்றையும் அவரே நேரடியாக கவனித்து கொள்கிறாராம். இதற்காக மாதம் தோறும் பெரிய தொகையை செலவு செய்கிறார் அந்த மழலைகளுக்காக.
இந்நிலையில், "ஆம்பள" படத்திற்கான படப்பிடிப்பிற்காக ஊட்டியில் இருக்கும் ஹன்சிகா,அந்தப்படப்பிடிப்பை முடித்து விட்டு அங்கிருந்து அப்படியே ஹைதராபாத் சென்று ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணநிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளாராம்.
ஹைதராபாத்திலிருந்து நேராக மும்பை கிளம்பும் ஹன்சிகா, இந்த வருட தீபாவளியை, தான் தத்தெடுத்த 30 குழந்தைகளுடன் சேர்ந்து சந்தோசமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.
பணம் மட்டுமே பெரிதென்ற திரையுலகில், மனிதத்துவம் கொண்ட சில மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
*கணேசமூர்த்தி ராகவன்