இலங்கைக்கும் - நியூசிலாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பினை விருத்திச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி இருநாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
பாலுற்பத்தி துறை உட்பட்ட விவசாய துறையில் நியூசிலாந்தில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் எமது நாட்டிலும் பயன்படுத்த வேண்டும்.
அதேபோன்று இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன்பொழுது உரையாற்றிய நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கை ஆசியாவில் பிரகாசிக்கும் நாடாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை வர்த்தக நடவடிக்கைகளுக்கான சிறந்த மத்திய நிலையமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் பாலுற்பத்தி மற்றும் வனவிலங்குதுறை அபிவிருத்தி தொடர்பிலான இரண்டு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து பிரதமருக்கு அன்பளிப்பாக 5 வயதான 'நந்தி' என்ற பெண் யானை கையளிக்கப்பட்டது.
பிரதமர் ஜோன் கீ-க்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யானைக்குட்டியின் உரிமைப் பத்திரத்தை கையளித்தார்.
எனினும் இந்த நடவடிக்கையை விலங்கு உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
சிறு வயதான யானைக்குட்டியொன்று அதன் விலங்கு குடும்பத்திலிருந்து வேறுபடுத்துவது வன்மையான செயற்பாடு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த வருடம் அஞ்சலி என்ற யானைக்குட்டியும் நியுசிலாந்தின் ஓக்லன்ட் வனவிலங்கு காட்சியகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.