டெஸ்ட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் M.S.டோனி!இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான ஓர் அணித்தலைவர் என்று போற்றப்பட்ட மகேந்திர சிங் டோனியின் டெஸ்ட் வாழ்க்கை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இன்றைய Boxing Day டெஸ்ட் போட்டியோடு முடிவுக்கு வந்திருக்கின்றது.
ஒரு சாதாராணமான குடும்பத்தில் பிறந்து சாதனையால் உலகம் அறிந்த ஓர் உன்னத கிரிக்கெட் வீரன் தன் ஓய்வை சாதாரணமாகவே அறிவித்து TEST கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுத்திருக்கிறார்.
சாதனைகள் பலது படைத்து கிரிக்கெட் உலகை ஆண்ட பல விற்பன்னர்கள் தங்கள் இறுதிக் காலகட்டத்தில் தங்கள் ரசிகர்களாலே வெறுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று கோஷமிட்டு வேதனைகள் பலவற்றை சுமந்துகொண்டு விடைபெறும் முடிவை அறிவித்த நிலைமைகளும் கிரிக்கெட்டில் நாம் அறிந்ததே!
டோனிக்கும் இந்த நிலைமை வந்து விடக்கூடாது என்று எண்ணியவர்கள் பலரிருக்கிறார்கள்.வெற்றிகளை பெறுகின்ற போது அந்த அத்தனை பெருமைகளையும் தன் அணிக்கு அற்பணிக்கும் டோனி மாறாக தோல்விகளை தழுவுகின்ற போதிலெல்லாம் அந்த தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் தானே தன் தோளில் சுமந்து கொள்கிறார்.
இதுதான் டோனி அதிகம் விமர்சிக்கபடக் காரணமாக அமைந்து விட்டது.
வெளிநாட்டு மண்ணில் அதிகமான,அதுவும் மோசமான தோல்விகளை சந்தித்த அணியாகவும்,அந்த மோசமான அணியை வழிநடத்திய தலைவராகவும்தான் டோனியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வு நிறைவுக்கு வந்திருக்கின்றது.
சச்சின்,டிராவிட்,லக்ஷ்மன் ,சேவாக்,கம்பீர் என்று பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் அணியில் இருந்த காலத்திலேயே டோனி தலைமையிலான அணி 2011 ம் ஆண்டு பருவகாலத்தில் அதுவும் டெஸ்ட் தரநிலையில் 18 மாதங்களாக முதலிடம் வகித்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்விகளை தளுவஆரம்பித்ததிலிருந்து டோனியின் டெஸ்ட் தலைமைத்துவம் கேள்விக்கு ஆளானது.
இதற்கு பின்னர் மோசமான பின்னடைவுகளை சந்தித்த டோனி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 30 test போட்டிகளில் ஆடியிருக்கிறது. ஆனால் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில்தான் வெற்றியை ருசிக்க முடிந்திருக்கின்றது.
2011 இல் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு எதிரான 4-0 என்ற அடிப்படையிலான தோல்விகளுக்கு பின்னர் 2013 இல் தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற அடிப்படையிலும், பின்னர் 2014 இல் நியூஸ்லாந்து அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற அடிப்படையிலும் இங்கிலாந்து அணிக்கெதிராக இந்தாண்டில் 3-1 என்ற அடிப்படையிலும் இந்திய அணி வழமையான அதே வெளிநாட்டு தோல்விகளை தழுவியது.
இப்போது இடம்பெறும் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற அடிப்படையில் இந்திய அணி இன்னுமொரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரை இழந்த நிலையில்தான் ஒரு போட்டி மீதமாகவுள்ள நிலையில் டோனியிடம் இருந்து இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
டோனியின் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட ஒட்டுமொத்தமான கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்த வரையில் இந்த தீர்க்கமான முடிவுக்கு அதிக வரவேற்பே கிடைத்திருக்கின்றது.
என்ன காரணம் என்றால்,இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் மோசமான தோல்விகளை தழுவுகின்றது என்கின்ற அடிப்படை வாதக் கருத்துக்கள் சரியாகப் பட்டாலும் ஒரு ஒட்டு மொத்த அணியாக இளையவர்களை கொண்ட இந்த இந்திய அணி போராட்டகுணம் கொண்ட அணியாக அந்நிய மண்ணிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கின்ற ஒரு காலத்திலேயே இந்த முடிவை டோனி எடுத்திருக்கின்றார்.
2011 பருவ காலத்தில் இந்திய அணி மோசமான தோல்விகளை தழுவிய காலகட்டத்திலோ,அல்லது சிரேஸ்ட வீரர்கள் ஓய்வை அறிவித்த காலத்திலோ இவர் அணியின் தலைமையிலிருந்து ஒதுங்கும் முடிவை எடுத்திருப்பாராயின் அது இன்னுமின்னும் இந்திய கிரிக்கெட்டை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும்.
ஆனால் இப்போது இருக்கும் இந்திய அணி என்பது தோற்றுப்போனாலும் இறுதிவரைக்கும் போராடியே தோற்றுப் போகின்றது.
அடிலையிட்டில் நடந்த முதலாவது TEST போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்துதான் போட்டியை கோட்டைவிட்டது ,அதேபோன்று பிரிஸ்பேன் டெஸ்டில் மிக குறைந்த வெற்றி இலக்கை நிர்ணயித்திருப்பினும் அவுஸ்ரேலியாவின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப்பெரும் நெருக்கடியை கொடுத்தது.
அதேபோன்று இன்றைய மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை இந்தியா சமப்படுத்தியிருக்கின்றமை கூட இந்தியா அணியை பொறுத்த வரையில் ஓர் வெற்றியாகவும் அவுஸ்ரேலிய அணியை பொறுத்தவரையில் அது ஒரு தோல்வியுமாகவே நோக்கபடுகின்றது.
இறுதியாக இந்த மைதானத்தில் நடந்திருக்கின்ற 25 டெஸ்ட் போட்டிகளில் 2 மட்டுமே சமன் செய்யப்பட்டிருக்கிறது.அதுவும் 1997 ம் ஆண்டுக்கு பின்னர் இந்த மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இன்றைய போட்டியைத் தவிர எந்தவொரு போட்டியும் சமநிலையில் முடியவில்லை.
அதனைவிடவும் இந்திய அணி இந்த மைதானத்தில் இறுதியாக சந்தித்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியையே தழுவியிருக்கின்றது. இப்படியான மைதானத்தில் இன்றைய போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்திருக்கின்றமை பலரையும் புருவங்களை கொஞ்சம் உயர்தச் செய்திருக்கின்றது.
இப்படி எழுச்சியான பாதையில்,அணியை பயணிக்கச் செய்த பின்பே டோனியின் இந்த முடிவு வந்திருக்கின்றது.
ஆனால் இனிவரப்போகின்ற நாட்களில் இந்தியா அணி விராட் கொஹ்லி தலைமையில் வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை பெற்றால் அப்போது இந்த கிரிக்கெட் உலகம் கோஹ்ளியை புகழவும் தோனியை இகழவும் மறக்காது எனலாம்.
எது எப்பிடியோ இனிவரும் நாட்கள்தான் அதற்கான பதிலை கொடுக்கபோகின்றது.
டோனியின் தலைமையில் இந்தியா அணி தோல்விகளை தழுவுவதற்கு காரணம் இல்லாமலும் இல்லை!
டோனியின் வியூக அமைப்புக்கள் அதிகம் தற்காப்பு ஆட்டத்து நிகராகவே மேற்கொள்ளபடுகின்றன.இது டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்புடையதல்ல.அதனைவிடவும் மிகச் சிறந்த அணித்தலைவராக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அணியை வழிநடத்தும் டோனியால் டெஸ்ட் போட்டிகளில் அணியை சீராக வெற்றியை பெறுகின்ற அணியாக மாற்ற முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.
MSD அணித்தலைவரான பின்னர் தொடர்ந்து 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்கவேயில்லை. அதில் 8 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளிலும் சமநிலையும் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணி வெற்றியை பெறுவதற்கு எதிரணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்தக் கூடிய தரமான பந்து வீச்சாளர்கள் அவசியமானது.
வேகபந்து வீச்சில் துல்லியமாக செயற்படும் நல்ல வேகப் பந்து வீச்சாளர்களை அவர் அணியில் கொண்டிருக்கவில்லை.அதனைவிடவும் வெளிநாட்டு மண்ணில் அணியின் பிரதான சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தும் சுழல் வித்தைக்காரனாகவும் செயற்படவில்லை.
இப்படியான பல காரணங்களைஇவர் தோல்விகளுக்கு அடுக்கி கொண்டே போகலாம்.ஆனாலும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளை பொறுத்த வரையில் அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தாலும் துடுப்பாட்ட பலத்தை அபரிவிதமாக வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றிகள் பலதை பெற்றிருக்கிறது.
எது எவ்வாறாயினும் இந்த தொடரில் விராட் கொஹ்லி துடுப்பாட்டத்திலும் ,அணியின் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை தரக் கூடிய வகையில் செயற்பட்டுள்ளமையால் இந்த தொடரின் முடிவுக்கு பின்னர் இந்திய தேர்வாளர்களுக்கு ஒரு நெருக்கடியான நிலைமை வந்திருக்கும்.
அதனை கருத்தில் கொண்டு டோனி கௌரவமாக வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்.
2005 இல் அறிமுகமான டோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 ஆட்டமிழப்புகளையும்,4876 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.அவுஸ்ரேலிய அணிக்கெதிரான அதிகபட்சமான 224 ஓட்டங்கள் அடங்கலாக 6 சதங்களையும் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை டோனி பங்கெடுத்துள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் 5 அரைச் சதங்கள் அடங்கலாக 534 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.
இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கிடைத்த நல்ல துடுப்பாட்டம் தெரிந்த விக்கெட் காப்பாளர் என்ற பெருமையும் தோனிக்குத்தான் இருக்கின்றது.
ஆனால் டோனியின் இந்த வரவால் இந்தியா கிரிக்கெட் அணியில் நிரந்தர இடத்தை தக்க வைக்க முடியாமல் அவதியுறும் தினேஷ் கார்த்திக்,ரிடிமான் சஹா,நாமன் ஓஜா ,பார்த்திவ் பட்டேல் ஆகிய வீரர்கள் இனிவரும் நாட்களில் இந்த இடத்தை குறிவைக்கலாம்.ஏன் இந்த மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் கொடுக்கப்பட்ட 22 வயதான லோகேஷ் ராகுலும் ஒரு விக்கெட் காப்பாளரே!
ஆனாலும் இப்போதைய நிலையில் உடனடித் தீர்வாக இந்த இடம் ரிடிமான் சஹாவுக்கே கிடைத்திருக்கிறது.
எது எவ்வாறாயினும் இந்தியா கிரிக்கெட் அணியை எட்ட முடியாத எல்லைகள் எங்கும் பயணிக்கச் செய்து ,மகுடங்கள் பலவற்றை பெற்றுக் கொடுத்து இன்றோடு டெஸ்டுக்கு விடைகொடுத்திருக்கும் டோனியை வாழ்த்தி வழியனுப்புவோம்.
*தில்லையம்பலம் தரணீதரன். 30.12.2014