இந்திய உலக கிண்ண அணியும்.!தேர்வு முறையில் தொக்கி நிற்கும் கேள்விகளும்.!11 வது உலக கிண்ணத்தை குறி வைத்துக் களமாடக் காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் படையணியின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.
இந்திய அணியின் தேர்வுக் குழு இன்று மும்பையில் பிரதம தேர்வாளர் சந்தீப் பட்டேல் தலைமையில் கூடி அதிக வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் ஒரு நியாயமான,பக்கச் சார்பற்ற அணியொன்று தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனாலும் இந்த அணியில் ஏன் சில வீரர்கள் சேர்க்கப்படவில்லை,ஏன் இவர்கள் சேர்க்கப்பட்டார்கள் என்ற கேள்விகள் எல்லோராலும் இன்று அதிகமாக கேட்கபட்டது.
இப்படியான நிலையில் இது குறித்தான விபரங்களை கொஞ்சம் ஆழமாகத் தேடிப்பார்த்து சிலரது கேள்விகளுக்கு ஒட்டுமொத்தமான விடையைத்தர முனைகின்றோம்.
இம்முறை தேர்வு செய்யப்பட்ட அணிஎன்பது அண்மைக் காலபெறுதிகளுக்கும் அவர்களது தற்போதைய உடற்தகுதி நிலைகளையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்படிருக்கிறதே தவிர, அவர்களது கடந்தகாலச் சாதனைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
*இன்று தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்தியாவின் உலக கிண்ண 15 பேர் கொண்ட அணி இதுதான்.
1.சிகார் தவான்,
2.ரோஹித் சர்மா,
3.விராத் கொஹ்லி,
4.அஜின்கியா ரஹானே
5.சுரேஷ் ரைனா,
6.MS டோனி,
7.அம்படி ராயுடு,
8.ரவீந்திர ஜடேஜா,
9.ரவிச்சந்திரன் அஸ்வின்,
10.அக்சார் பட்டேல்
11.புவனேஸ்வர் குமார்,
12.மொகம்மது சாமி,
13.இஷாந்த் சர்மா,
14.உமேஷ் யாதவ்
15.ஸ்டுவர்ட் பின்னி
ஆகிய வீரர்களே இன்றைய நாளில் இறுதி அணியாக தேர்வு செய்யப்பட்டவர்களாவர்.
இந்த அணியின் சராசரி வயது 27 ஆகும், அத்தோடு இந்த அணியின் துடுப்பாட்ட வீரர்களால் 48 சதங்களும் ,178 அரைச்சதங்களும் பெறப்பட்டுள்ளதோடு,அணியின் பந்து வீச்சு குழாமில் இடம்பெற்றுள்ளவர்களால் ஓவருக்கு சராசரியாக 5.16 எனும் அடிப்படையில் ஓட்டங்கள் விட்டுகொடுக்கபட்டு மொத்தமாக 587 விக்கெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்ட வீரர்களாக சிகார் தவான்,ரோஹித் சர்மா,விராத் கொஹ்லி,அஜின்கியா ரஹானே
சுரேஷ் ரைனா,MS டோனி,அம்படி ராயுடு ஆகிய 8 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த இந்த வீரர்களை அணியில் இணைத்துக் கொண்டதில் தவறுகள் எதனையும் யாராலும் சொல்லிவிட முடியாது.
ஏனென்றால் இந்த அணிதான் இந்தியா சார்பில் அண்மைய நாட்களில் ஒரு நாள் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்ற அணியாக இருக்கின்றது.
இதிலே துடுப்பாட்ட வீரர்களாக உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் ரொபின் உத்தப்பா மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கும் தமிழக வீரர் முரளி விஜய் ஆகியோர் கவனிக்கபடாமல் போனது ஏன் என்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை.
தமிழக வீரர் முரளி விஜையை பொறுத்தவரையில் 31 வயதாகும் இவர் இறுதியாக 2013 ஜூலை மாதத்திற்குப் பின்னரான கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியில் இணைக்கப்படவில்லை ,அதைவிடவும் இவர் பங்கெடுத்துள்ள 14 ஒரு நாள் போட்டிகளில் 33 ஓட்டங்களையே அதிகபட்சமாக பெற்றுள்ள இவரது சராசரி 20 க்கும் குறைவாகவே உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இவர் காட்டி வரும் திறமையின் அடிப்படையில் இவரை அணியில் சேர்க்கவேண்டும் என்று தேர்வாளர்கள் கருதியிருப்பினும் சிலவிடயங்களில் இவர் பின்தங்கிப் போகிறார்.
ஆரம்ப வீரர்களாக ஒருநாள் போட்டிகளில் அண்மைய நாட்களில் சிறப்பாக செயற்படும் தவான்,ரோஹித் மற்றும் ரஹானே ஆகிய வீரர்கள் இருக்கின்ற போது விஜையும் ஒரு ஆரம்ப வீரராக அணியில் இவரை சேர்ப்பதை விடுத்து தேர்வாளர்கள் ஒரு மத்திய வரிசை வீரரை தேடியிருக்கலாம்.
அந்த வகையில் மத்திய வரிசையில் அண்மைய நாட்களில் இந்திய அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை கெட்டியாக பயன்படுத்திய அம்பாட்டி ராயுடவை நீக்குவது தவறானதாகப் பட்டிருக்கும்.
அத்தோடு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்படும் ரொபின் உத்தப்பாவை பொறுத்த வரையில் இவர் உள்ளூர் போட்டிகளில் காட்டும் திறமையை சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்கும் போது காட்டுவதில்லை என்ற ஒரு குற்றச் சாட்டு இவருக்கு இருக்கிறது.
அனாலும் ஒரு அணியின் ஆரம்ப வீரராக ,அல்லது மேலதிகமான விக்கெட் காப்பாளராக இவர் அணியில் சேர்க்கப்படலாம் என்றாலும் அந்த விடயத்திலும் இவர் தேவை இல்லாமல் போய்விட்டது.
M .S டோனி நல்ல உடற்தகுதி நிலையில் இருக்கின்ற போது மேலதிகமான ஒரு விக்கெட் காப்பாளர் தேவை என்பது ஏற்புடையதாயினும் அம்பாத்தி ராயுடுவும் விக்கெட்காப்பு தெரிந்தவர் என்கின்ற ரீதியில் முரளி விஜய்,உத்தப்பா ஆகியோரோடு போட்டி போடுகின்ற போது அம்பத்தி ராயுடுவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
இப்படியான நிலையிலேதான் இந்த அணியில் டோனி அடங்கலாக 8 துடுப்பாட்ட வீரர்கள் தேர்வாகியிருக்கின்றார்கள்.
வேகபந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில் அணியின் பிரதானமான வேகபந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார்,
மொகம்மது சாமி,உமேஷ் யாதவ், ஆகிய வீரர்களோடு ஓரளவு அனுபவம் என்ற அடிப்படையில் இஷாந்த் சர்மாவும் தேர்வில் வந்திருக்கிறார்கள்.
மோஹித் சர்மா ,வருண் ஆரோன் ,தவால் குல்கர்னி ஆகிய வீரர்களில் இருந்து ஒரு வேகபந்து வீச்சாளர் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இருப்பினும் போட்டிகள் நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகாமான ஆடுகளம் என்ற அடிப்படையில் ஒரேயொரு வேகபந்து வீசகூடிய சகலதுறை வீரரையாவது அணியில் சேர்க்கவேண்டும் என்கின்ற அடிப்படையில் ஸ்டுவர்ட் பின்னியும் அணியில் வாய்ப்பை பெற்றுக்கொண்டிருக்கின்றார்.
இவரது தந்தையார் ரோஜர் பின்னி இந்தியாவின் மத்திய மண்டலம் சார்பில் சந்திப் பட்டேல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு தேர்வுகுழு அங்கத்தவர் என்பதை மறந்து விடுங்கள்.
சுழல் பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் பிரதானமாக அஸ்வின் ,ஜடேஜா,மற்றும் இளம் வீரர் அக்சார் பட்டேல் ஆகியோர் அணியில் உள்வாங்கபட்டுள்ளனர்.
ரவீந்திர ஜடேஜாவுக்கு உபாதை தொடர்ந்து அவரால் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாவிட்டாலும் அவரைப் போன்றே துடுப்பாட்டம் ,பந்து வீச்சு மேற்கொள்கின்ற அதுவும் அண்மைய நாட்களில் சிறப்பாகவும் ,சிக்கனமாகவும் செயற்படும் இவரையும் அணியிலிருந்து புறக்கணிப்பது இந்திய தேர்வாளர்களுக்கு கடினமான முடிவைகொடுத்திருக்கும்.
இப்படியான கேள்விகளுக்குப் பிறகுதான் ஜுவ்ராஜை உலக கிண்ண அணியில் சேர்க்க முடியுமா என்பது பற்றி தேர்வாளர்களின் கவனம் வந்திருக்கும்.
கடந்த முறை இந்திய அணி உலக கிண்ணத்தை ஏந்துவதற்கு பிரதான பாத்திரமேற்ற இவர் அணியில் கண்டுகொள்ளப் படாமல் போனது அநேக ரசிகர்களு கவலையான விடயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால்
ஜுவ்ராஜ் ஏற்கனவே தேர்வான 30 பேர் கொண்ட பட்டியலில் இணைக்கப்படாத நிலையில் தற்போது உபாதை அடைந்துள்ள சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இவரை அணியில் இணைக்கும் வாய்ப்பு இருப்பதாகவே கடந்த 2 நாட்களாக அறியப்பட்டது.
உள்ளூர் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து 3 சதம் அடித்து 520 ஓட்டங்களை பெற்றுள்ள ஜுவ்ராஜ் அணியில் ஒரு முக்கிய வீரராக இணைக்கப்படுவதனை இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் இந்திய தேர்வாளர்களது தேர்வுக் குழு கூட்டத்தில் இன்று ஜுவ்ராஜின் பெயரும் பரீசீலனைக்கு வந்தாலும் இறுதியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கடந்த உலக கிண்ண போட்டிகளில் 15 விக்கெட்டுக்கள் அடங்கலாக 362 ஓட்டங்களையும் பெற்று ஆட்டநாயகன் விருதையும் வென்ற ஜுவ்ராஜ்
கடந்த ஓராண்டுக்கும் அதிகமாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கதே!
இப்படியிருக்க நாங்கள் மேற்குறிப்பிட்டுள்ள விடயங்களோடு நீங்களும் ஒத்துபோனால் ஜுவ்ராஜை அணியில் 16 வது வீரராகத்தான தேர்வாளர்களால் இணைத்திருக்க முடியும்.
15 வீரர்கள் எனும் குறித்த வரையறைகளுக்கு மட்டுப்பட்டு அண்மைய பெறுதிகளின் அடிப்படைகளையும் கவனத்தில் கொண்டு இந்த இறுதி அணி தேர்வாகியிருக்கலாம்.
ஆனால் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்கள் உலக கிண்ண அணியை அண்மைய பல நாட்களாக தேர்வு செய்து வந்தாலும் அவர்கள் எல்லோரது அணித்தேர்வுகளை விடவும் முன்னாள் வீரர் டிராவிட் தேர்வு செய்திருக்கும் அதே 15 பேர் கொண்ட அணியே உலக கிண்ணத்துக்கு தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதுவே.
முன்னாள் தேர்வாளர் ஸ்ரீகாந்தின் கனவு அணியில் சகலதுறை வீரர் பின்னியை விடுத்து உத்தப்பா ,முரளி விஜய் ஆகியோரை சேர்த்திருந்தார்.
சுனில் கவாஸ்கரது அணியில் இசாந்த் சர்மாவுக்கு பதிலாக மோகித் சர்மா சேர்க்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும் இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த இந்திய அணி நடப்பு உலக சாம்பியன் எனும் மகுடத்தை காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்தே அறிந்துகொள்ள வேண்டும்.
*தில்லையம்பலம் தரணீதரன்.2015.01.06