ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்’ நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் நடிகர் நாசர், நடிகைகள் கௌதமி, ஊர்வசி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், லிங்குசாமி, விக்ரமன், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு. விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:–
ரஜினியையும், என்னையும் பாலச்சந்தர்தான் கண்டுபிடித்தார் என்று கூறி வருகிறார்கள். பாலச்சந்தர் இல்லாவிட்டாலும் கூட ரஜினி முரட்டுக்காளை போன்றவேறு ஏதாவது ஒரு படத்தின் மூலம் நடிகனாகி இருப்பார். ஆனால் பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன்.
பாலச்சந்தர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றை இந்த மேடையில் ஒலி பரப்பினார்கள். அதை கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எனக்கும் பாலச்சந்தருக்குமான பாசப்பிணைப்பு நெடுங்காலமாக தொடர்கிறது. எனது மகா குருவாக அவரை கருதுகிறேன்.
உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தர் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு கிடைத்த பெரிய பெருமை. இந்த பாடல் வெளியீட்டு விழா மேடையில் அவர் இருப்பார் என்றுதான் அப்போது நான் கருதி இருந்தேன். அவர் இருக்க மாட்டார் என்று முன்பே தெரிந்து இருந்தால் இன்னும் பல சிறப்புகளை அவருக்கு செய்து இருப்பேன்.
பாலச்சந்தரில் நான் பாதியாக இருக்கிறேன் என்று இங்கே பேசிய பார்த்திபன் குறிப்பிட்டார். அப்படி அவர் பேசியதை கர்வமாக எடுத்துக் கொள்ளாமல் கடமையாகவும் உரிமையாகவும் ஏற்றுக் கொள்கிறேன்.
பாலச்சந்தர் என்ற மாமனிதரின் நிழலாக நான் இருப்பேன். அவர் பணிகளை தொடர்ந்து செய்வேன். காலமெல்லாம் அவருக்கு நன்றி உள்ளவனாகவும் இருப்பேன்.
இவ்வாறு கமல்ஹாசன் உருக்கமாக பேசினார்.
CstroRahul