கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி பிபிசி நிறுவனம் சார்பில் ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படம் உருவாக்கப்பட்டது.
இயக்குநர் லெஸ்ஸி உட்வின் உருவாக்கிய இப்படத்தில், கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் சர்ச்சையான பேட்டியும் இடம்பெற்றதால் இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, இந்தியா தவிர மற்ற நாடுகளில் இந்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட ‘இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப வேண்டும் என்று ஒரு சில அரசியல்வாதிகளும், நடிகர், நடிகைகளும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குற்றவாளியின் பேட்டியை தடை செய்தது தவறு என்றும், சரி என்றும் மாறுபட்ட கருத்துக்கள் சினிமா நட்சத்திரங்களுக்குள் உருவாகி வருகிறது.
இது குறித்து சமந்தா கூறும்போது, ‘ஒருவர் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு அனுமதிக்க வேண்டும். நல்ல கருத்தாக இருந்தால் ஏற்கலாம், தவறானதாக இருந்தால் தவிர்த்துவிடலாம். பொதுவாக அதன் மூலம் ஏதாவது ஒன்றை அறிய முடியும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இப்படியொரு நிலை இருப்பது பரிதாபம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்ரேயா கூறும்போது, Documentary படத்தை பார்க்க குறுக்கீடு வந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இந்தியாவின் மகள் என்ற பெயரில் பிபிசி தயாரித்த Documentaryயை நான் ஆதரிக்கிறேன். அதேசமயம் ரத்த வெறிபிடித்த சைக்கோ குற்றவாளி தனது குரூர எண்ணத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தது ஏன்? என கோபத்தை வெளிப்படுத்தினார்.
Documentaryயை வெளியிட தடை விதித்ததற்கு நடிகர் சித்தார்த்தும் தனது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் ஆணின் துணை இல்லாமல் பெண்கள் இருக்க முடியாது என்று குற்றவாளியின் வழக்கறிஞர் கூறியதற்கு நடிகை அமலா பால் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.‘வழக்கறிஞர் அப்படி சொல்வது மானபங்கத்துக்கு எந்தவித்திலும் குறைவில்லாத குற்றம்‘ என குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே இதுகுறித்து நடிகை டாப்ஸி கூறும்போது, குற்றவாளியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கடவுள் எனக்கு ஒரு கொலை செய்ய அனுமதி கொடுத்தால் அந்த குற்றவாளியை கொல்வேன்‘ என ஆவேசமாக கூறினார்.
இது குறித்து பிரகாஷ் ராஜ் கூறும்போது‘இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் தலைகுனிய வேண்டும், இந்த நிகழ்ச்சியை தடை செய்ய சொன்னவர்கள் வெட்கப்பட வேண்டும்’ என்று கோபமாக கூறியுள்ளார்.