தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் திகதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தவருடமும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தில் நடைபெறவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு சென்னையில் இன்று மௌன போராட்டம் மேற்கொள்ள உள்ளார். இதனிடையே சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பற்றிய சிறிய விவாதம் ஒன்று நடைபெற்றது.
அதில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார். உடனே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆர்.ஜே. பாலாஜி அதற்கான பதிலைத் தந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வரவேற்பு பெற்றுள்ளது.
குஜராத்தில் ஒட்டகம் பொதி சுமக்கிறது. டெல்லியிலிருந்து பார்த்தாலே தெரியும். முதலில் அதைத் தடை செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு எங்கோ உள்ள மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டை ஏன் தடை செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஆர்.ஜே. பாலாஜி, கிரண் பேடியின் காலணியைக் குறிப்பிட்டு, அது தொலால் ஆனது என்றார்.
சட்டப்படி நடக்கவேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் ஆணை என்றார் கிரண்பேடி. உடனே பாலாஜி, அதுசரிதான். ஆனால் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்குத் தண்ணீர் விடவேண்டும் என்று இதே உச்ச நீதிமன்றம்தான் கூறியது. ஆனால் அந்த மாநிலம் அதைக் கேட்கவில்லை. இதை ஏன் யாரும் கேள்வி எழுப்புவதில்லை என்றார்.