பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சர்வதேச உறுதிமொழி பத்திரத்தை நிறைவேற்றுவதற்காகவே ஒன்றிணைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் சர்வதேச தேவைப்பாடுகளுக்கு அமைய மாத்திரமே செயற்பட்டு வருகிறது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரனின் பிரதான ஆலோசகரான லிம்டன், கடந்த தேர்தல்களின் போது இலங்கை வந்து அலரிமாளிகையில் தங்கி இருந்தார்.
இதன்பின்னர் அண்மையில் மீண்டும் இலங்கை வந்த அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பல உறுப்பினர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது பல இலக்குகளை வெற்றிக் கொள்வதற்காக, தொடர்ந்தும் 160 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கெஹெலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக தேவையான அனைத்து வரிகளையும் மக்களிடம் அறவிடுமாறும் லிம்டன் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருடத்துக்கு இது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு, நான்காம் வருடம் இதனை விடுவித்து ஐந்தாம் வருடம் ராஜபக்ஷவின் கடன்கள் நிறைவு செய்யப்பட்டு, சிறந்த பொருளாதாரத்தை கொண்டிருப்பதாக தெரிவித்து நிவாரணங்களை வழங்குமாறும் அரசாங்கத்துக்கு அவரால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கெஹெலிய கூறியுள்ளார்.