அதிகாரங்களை வழங்குதல் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடும், வட மாகாணசபை கோரும் அதிகாரப்பகிர்வு என்பதும் வேறுபட்டவையாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் தரப்பின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் பெரும்பான்மையினரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாக வேண்டுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதான நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் சாராம்சம் வருமாறு:
“ தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எவரும் முன்னெடுக்க அரசு ஒருபோதும் இடமளிக்காது. முன்னாள் ஜனாதிபதி 12 ஆயிரத்து 200 புலிகளை விடுதலை செய்ததைப் போன்று நாம் யாரையும் வெளியிடவில்லை. புலிகளின் தலைவர்களை அரசியல் நடவடிக்கைகளிலும், முக்கிய பொறுப்புகளிலும் வைத்து அரசியல் செய்யவில்லை.
நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் சமஷ்டி முறைமை மற்றும் அதியுச்ச அதிகார பகிர்வு என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சி உள்ளது என்பதற்காக அவர்களில் நிலைப்பாடு முழுமையானது என கருத முடியாது. அவர்களின் நிலைப்பாடு ஒரு சிறிய அளவில் உள்ள நிலைப்பாடாகும். பெரும்பான்மை நிலைப்பாடு அவ்வாறு அல்ல. பெரும்பானை நிலைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதனை மீறி இவர்கள் செயற்பட வேண்டும். அதேபோல் சமஷ்டி நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை.
சகலருக்கும் ஏற்ற வகையிலான உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பு அமையப்பெற வேண்டும். நாட்டை துண்டாடும் எண்ணத்தில் எவரும் முயற்சித்து அரசியல் அமைபை உருவாக்கினால் அதை தடுக்க வேண்டுமெனவும்” அவர் தெரிவித்துள்ளார்.