இந்தியாவின் கேரளாவில் ஆசிரியர் ஒருவர் தினசரி நீச்சலடித்து ஆற்றைக் கடந்து சென்று, மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார்.
அப்துல் மாலிக் என்ற அந்த ஆசிரியர், பள்ளிக்கூடத்திற்கு நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத் தினமும் நீந்தி தான் வருகிறார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் 20 வருடமாக ஆசிரியராக இருக்கும் அப்துல் மாலிக் கழுத்தளவு உள்ள தண்ணீரில், இடுப்பில் ஒரு ரப்பர் டியூபைக் கட்டிக் கொண்டு தனது டிபன் பாக்ஸ், ஷூ ஆகியவற்றை கையில் தூக்கிக் கொண்டு தினசரி காலை பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்.
மாலையிலும் இதேபோல தான் வீட்டிற்கு செல்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, ‘பஸ்சில் வந்தால் 12 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டும். அதற்குள் பள்ளிக் கூடத்திற்கு நேரமாகி விடும். எனவேதான் நீச்சலடித்து வருகிறேன். இது சுலபமானதும் கூட, சீக்கிரமும் வந்து விடலாம். பள்ளிக்கூடத்திற்கு நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி வருகிறேன்’ என்றார்.
ஆற்றைக் கடந்து வந்த பின்னர் அங்கிருந்து கால் மணி நேரம் மலைப்பகுதிக்குள் நடந்தால்தான் பள்ளிக்குப் போக முடியும். இருப்பினும் 20 ஆண்டுகளாக பள்ளி சென்று பாடம் கற்பித்துக்கொண்டு தான் இருக்கிறார். இவரது அர்ப்பணிப்பை பார்த்து வியந்து போன லண்டன் மருத்துவரொருவர், சமீபத்தில் ஒரு படகை பரிசாக வழங்கியிருக்கிறார். அதனால் இதுவரை நீச்சலில் சென்றுகொண்டிருந்த மாலிக், தற்போது படகு சவாரியில் பள்ளிக்குச் செல்கிறார்.