பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. தற்போது ஒரு சில படங்களில் கவுரவ தோற்றத்திலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் "நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது" என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது.
இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் "2 நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள்.
இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள்.
பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள்.
நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை" என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.