இந்தியாவின் பிரதான தேசிய கட்சியில் ஒன்றான பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் தமது வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. தோல்வியோ..? வெற்றியோ...? வருவது வரட்டும். ஆனால் போட்டியில் பங்குபற்ற தன்னாலான முயற்சியை மேற்கொள்ள பின்நிற்பதில்லை, பிரதமர் 'நரேந்திரமோடி' அங்கம் வகிக்கும் அந்தக் கட்சி.
இருந்தும், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே நகர் தொகுதியில் தற்போது ஜெயலலிதா இல்லாத காரணத்தால் அவருடைய இடத்திற்கு புதிய மக்கள் பிரதிநிதி ஒருவரை மக்கள் தீர்மானிக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது. குறித்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா...? வேண்டாமா...? என்பதில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வந்தது. அத்துடன், மக்கள் நேசிக்கக் கூடிய யாரை வேட்பாளராக்கலாம் என்றும் கட்சிக்குள் தீவிர கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை கௌதமி, தமிழ்நாட்டின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் பெயர்கள் தெரிவானது. முதலில் நடிகை கௌதமி தான் சென்னை வாழ் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றவரென பாரதீய ஜனதா கட்சி கருதியது. அவரை கட்சியில் இணைத்துக்கொண்டு போட்டியிட செய்யலாம் என்று பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பினர்.
இதுதொடர்பாக பா.ஜ.க வின் மிக முக்கிய பிரமுகர் ஒருவர் நடிகை கௌதமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு கௌதமியிடமிருந்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க வில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனை வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாம். இந்த இடைத்தேர்தலில் போட்டிடுவதற்கு கங்கை அமரனும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து எந்த நேரத்திலும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என கட்சி வட்டாரத்து செய்திகள் சொல்கின்றன.
இது இப்படியிருக்க, ஆர்.கே.நகர் தொகுதியில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பா.ஜ.க அறிக்கை தயாரித்துள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் வடசென்னை மக்களுக்கு எந்த வித நன்மையும் நடக்கவில்லை என்பதை பிரசாரத்தின்போது மிகமுக்கிய பிரசாரக் கருத்தாக முன்வைக்க பாரதீய ஜனதா வியூகம் வகுத்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவில் உள்ளனர். அவர்களின் வாக்குகளை தமதாக்கிக்கொள்ள, வெளிமாநிலத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள கூடும் என்றும் ஏனைய கட்சிகள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர். இருந்தும், மத்திய மந்திரிகள், பா.ஜ.க தேசிய தலைவர்கள் ஆகியோர், குறித்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.