அரசியல்வாதியொருவரின் மகளே இவ்வாறு வெட்டப்பட்டுள்ளார்.
யவத்மால் மாவட்டத்தில் உள்ள வனி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சஞ்சீவ் செட்டி. பா.ஜனதாவை சேர்ந்தவர். இவரது மகள் அஷ்வினி (வயது 23). புனே மாவட்டம் பிம்பிரி, வாக்கட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் அருகில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருடன் படிக்கும் மாணவர் ராஜேஸ் பக்ஷி (24) அங்கு வந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாணவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் மாணவியை வெட்ட முயன்றார். அப்போது மாணவி கைகளால் தடுத்தார். இதில் அவரது கை விரல் துண்டானது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் காயமடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் ராஜேஸ் பக்ஷியை கைது செய்தனர்.
போலீசாரிடம் மாணவன் ராஜேஸ் பக்ஷி கூறியதாவது:–
அஷ்வினியை கடந்த 3 ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வருகிறேன். எனது காதலை அவளிடம் பல முறை கூறினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. மேலும் அவள் பிற மாணவர்களிடம் பழகுவது எனக்கு பிடிக்கவில்லை. மாணவர்களுடன் பேச கூடாது என எச்சரித்து இருந்தேன். சம்பவத்தன்றும் எனது காதலை அவளிடம் தெரிவித்தேன். அப்போதும் எதுவும் சொல்லாமல் செல்ல முயன்றார். எனவே ஆத்திரத்தில் அவரை வெட்டினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட மாணவர் ராஜேஸ் பக்ஷி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.