அ.தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியை தினகரன் பெற்றபோது உற்சாகமாக தான் பணியாற்ற துவங்கினார். ஆரம்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் நாள் ஒதுங்கி இருங்கள், நிலைமை சரியாகட்டும் என்று சொல்லி கட்சியிலும் ஆட்சியிலும் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இல்லாமல் சரி செய்தார். கட்சியினரிடம் எப்போதுமே மென்மையான போக்கை கடைபிடித்ததால் கட்சி நிர்வாகிகள் கூட தினகரன் நடவடிக்கையை ஆரம்பத்தில் வரவேற்றார்கள். ஆனால், தினகரனுக்கு எதிரான கருத்துகளை கட்சியில் பரவ விட்டதில் அவர் குடும்ப உறுப்பினர் ஒருவரே தான் காரணம் என்கிறார்கள்.
சசிகலா குடும்பத்தில் முக்கிய பிரமுகரான அந்த குடும்ப உறுப்பினர் பழனிசாமி முதல்வரானதும், பெரிய லிஸ்ட் ஒன்றை அனுப்பியுள்ளார். அதிகாரிகள் டிரான்ஸ்பர் குறித்து அந்த லிஸ்டில் இருந்துள்ளது. இந்த தகவலை பழனிசாமி, தினகரனிடம் சொன்னதும் 'எந்த சிபாரிசும் வேண்டாம்' என்று கூறியுள்ளார். அந்த லிஸ்ட் குப்பைத் தொட்டிக்கு போய் உள்ளது. அந்த பிரமுகர் சூடாகி தனக்கு வேண்டிய அமைச்சர்களிடம், “அவன் தான் கட்சினு நினைக்கிறானா?, நாங்க இல்லாம அவனால் எப்படி செயல்பட முடியும்னு காட்டுறோம். நீங்க எனக்கு ஆதரவா இனி அவன்கிட்ட பேசுங்க. நடக்குறது பாத்துக்கலாம்” என்று கடுப்பாக பேசியுள்ளார். அதன் தொடர்ச்சியாக ஆர்.கே நகர் தேர்தலில் தினகரன் களத்தில் நின்றபோது, இந்த அமைச்சர்கள் தினகரனிடம் “சசிகலா படத்தை ஏன் பிளக்ஸில் போடவில்லை” என்று கேட்டுவிட்டு “குடும்பத்தை நீங்க ஒதுக்கபாக்குறீங்க” என்று சொன்னதுமே தினகரனுக்கு இவர்கள் பேச்சின் பின்னணி புரிந்துவிட்டது. அதன் பிறகு தான் வரிசையாக தினகரனுக்கு எதிராக காய் நகர்தல்கள் நடைபெற்றது.
அமைச்சர்கள் கூட்டத்தில் தினகரனை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது அந்த தகவல் அங்கிருந்து உடனடியாக தினகரனுக்கும் வந்துள்ளது. தினகரன், “எல்லோரும் ஒத்த கருத்தோடு இருக்கமாட்டார்கள். என் பக்கம் ஆறு அமைச்சர்கள் இருக்கிறார்கள்” என்று நம்பிக்கையாக இருந்துள்ளார். ஆனால், அந்த அமைச்சர்களுக்கு மன்னார்குடி குடும்பத்தில் இருந்தே போன் வந்துள்ளது. நீங்கள் பழனிசாமிக்கு ஆதரவு கொடுங்கள், கட்சி ஒன்றிணைந்தால் போதும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்கள். அதன் பிறகு தான் தினகரன் மனைவி அனுராதாவிடம் முக்கிய அமைச்சரே போன் செய்து, “மத்திய அரசு அழுத்தம் ஒருபுறம், உங்க குடும்பத்திலே உங்க கணவருக்கு எதிராக காய் நகர்த்தல் ஒருபுறம் என நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. யாரும் அவர் பின்னால் நிற்பார்கள் என்று நம்ப வேண்டாம். அதிகார்த்தை நோக்கி தான் எல்லாம் போகிறார்கள்” என்று சொல்லியுள்ளார். இந்த அமைச்சர் தான் தினகரனுக்கு வலது கரமாக இருந்தவர். தினகரனும் “எந்த நிலையிலும் என்னை விட்ட போகமாட்டார்” என்று நம்பிய ஒரு அமைச்சரே இப்படி சொன்னதை கேட்ட அனுராதா அந்த தகவலை தினகரனிடம் நள்ளிரவில் சொல்லியுள்ளார். அதை கேட்டு அப்செட் ஆன தினகரன், “யாரையும் நம்பமுடியலை. குடும்பத்திலும் குழிபறிக்கிறாங்க, கூட இருந்தவங்களும் விட்டுட்டு போறாங்க” என்று மனைவியிடம் புலம்பியுள்ளார். அனுராதா, “இப்போ அமைதியா இருப்போம், கட்சி ஒன்றிணைந்த பின் நம்மளை அவர்களே கூப்பிடுவார்கள்” என்று நம்பிக்கைக் கொடுத்து அமைதியாக்கியுள்ளார்.
அதன் பிறகு தான் தினகரனின் அந்த சென்டிமென்ட் அறிவிப்பு வெளியானது.
நன்றி விகடன்