வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஆய்வகத்தில் சமிக்ஞைகள் கிடைத்துள்ளன. வேற்றுகிரகங்களில் மக்கள் உள்ளனரா என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' ஆய்வு நடத்தி வருகிறது. இதற்காக விண்வெளியில் 'சாலை வரைபடம்' உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக நவீன தொலைநோக்கிகளை நிறுவியுள்ளனர்.
வேற்றுகிரகவாசிகள் ஆய்வுக்காக இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புது திட்டத்தை லண்டனில் துவக்கியுள்ளார். இத்திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளில் 640 கோடி ரூபாய் செலவிடப்படும். இதற்கு ரஷ்ய தொழிலதிபர் யூரிமில்னர் நிதி உதவி வழங்குகிறார்.
திட்டத்திற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் லார்டு மார்ட்டின் ரீஸ் தலைமை வகிக்கிறார்.இத்திட்டத்தில் ஆஸ்திரேலியா நியூ சவுத்வேல்ஸ், அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா ஆகிய இடங்களில் தொலைநோக்கிகள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேற்கு வர்ஜீனியா தொலைநோக்கி மூலம் 700 நட்சத்திரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து ஒலி அலைகள் கிடைக்கின்றன; மேலும், 11க்கும் மேற்பட்ட முக்கிய சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேற்றுகிரகவாசிகள் ஆய்வு மைய இயக்குனர் ஆண்ட்ரூ சிமோரியன் கூறுகையில், ''இதுவரை உறுதியான சமிக்ஞைகள் கிடைக்கவில்லை. இது ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டம். ஆராய்ச்சிகள் தீவிரமாக நடக்கின்றன,'' என்றார்.