இந்தி நடிகர் வினோத் கண்ணா தனது 70 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பல மாதங்களாக புற்று நோயுடன் போராடி வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1946ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் வினோத் கண்ணா. பி.காம்., பட்டதாரியான இவர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மும்பைக்கு வந்து வாய்ப்பு தேடினார். 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த "மான் கா மீட்" என்ற படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து "மேரி அப்னே, மேரே கான், மேரே தேஷ், கேத்தார், ஜெயில் யாத்ரா, அமர் அக்பர் ஆன்டனி, ராஜ்புட் குர்பானி, ஜூரம்" உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
அஜானுபாகுவான உடல் தோற்றமும், அவரது அழகும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுமார் 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ஷாரூக்கானின் தில்வாலே படத்தில் நடித்திருந்தார்.
நடிகராக மட்டுமல்லாது பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி.,யாகவும் இருக்கும் வினோத் கண்ணா, சமீபத்தில் உடல் நலக்குறைவால், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் நீர் சத்து குறைந்ததால், பாதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத் கண்ணா, சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
வினோத் கண்ணாவிற்கு கீதாஞ்சலி, கவிதா என்ற மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியான கீதாஞ்சலியை விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ராகுல் கண்ணா, அக்ஷ்ய் கண்ணா, சாக்ஷி கண்ணா என்ற மூன்று மகன்களும், ஸ்ரத்தா கண்ணா என்ற மகளும் உள்ளனர். வினோத் கண்ணா ஓஷோவின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.