'துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக ‘நரகாசுரன்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை கவுதம்மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் நரேனின் ‘க்னைட் நாஸ்டால்ஜியா’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அரவிந்த்சாமி இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டதால், அந்த மாதத்தில் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதால் இப்படத்தில் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இன்னொரு தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்கவைக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்களாம்.
இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ரேயா வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை கேட்டவுடனே இப்படத்தில் நடிக்க ஸ்ரேயா உடனடியாக சம்மதம் தெரிவித்தாராம். இந்த நிலையில் வரும் ஜுலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது