வாட்ஸ் ஆப் மூலம் பரவிய வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 பேரை பொது மக்கள் அடித்து கொலை செய்துள்ளனர். குழந்தைக் கடத்தல் தொடர்பாக பரவிய வதந்தியை நம்பி பொது மக்கள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரவிய வதந்தியால் நிகழ்ந்த கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பும் பகுதியில் கடந்த சில தினங்களாக குழந்தைக் கடத்தல் கும்பல் ஒன்று உலவி வருவதாகவும், அவர்கள் குழந்தைகளின் கை கால்களை வெட்டி எடுத்து விடுவதாகவும் வாட்ஸ் அப்பில் வதந்தி பரவி வந்தது. அதன் ஊடாக ஒரு சிலரின் புகைப்படங்களும் பரப்பபட்டு வந்துள்ளன.
இந்த நிலையில் சிங்பும் மாவட்டத்தின் மலைப் பகுதியில் இருந்த ஒரு சில இளைஞர்கள், வாட்ஸ் அப் புகைப்படங்களில் வந்தவர்களைப் போன்று இருந்த காரணத்தால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அந்த இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்துள்ளனர்.
நாகதீ என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் விகாஸ் குமார் வெர்மா, கௌதம் குமார் வெர்மா, மற்றும் கணேஷ் குப்தா ஆகிய மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவம் சிங்பும் மாவட்டத்தில் மட்டும் இரண்டு இடங்களில் நடைபெற்றுள்ளது.
இரண்டாவது சம்பவத்தில் 4 பேர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல் துறை ஐ.ஜி ஆசிஷ் பாத்ரா, வாட்ஸ் அப்பில் சில தினங்களாக பரவி வந்த வதந்தியை மக்கள் நம்பியுள்ளனர். அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் போல் இந்த இளைஞர்களும் இருந்த காரணத்தால் தாக்குதல் நடைபெற்றுள்ளது. வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்த இரு தாக்குதல் சம்பவங்கள் குறித்து இதுவரை 19 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வாட்ஸ் அப் வதந்தி முதலில் எங்கு இருந்து தொடங்கியது என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: இந்து