மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளரின் மனைவி மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கொலை நடந்த பிறகு அவர்களது 21 வயது மகன் காணாமல் போனதால் அவருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் சந்தேக்கின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள தனியார் ஊடகத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த குழுவில் காவல் ஆய்வாளர் தியானேஷ்வர் கனோர் முக்கிய பங்கு வகித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற கனோர்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் வீட்டிற்கு செல்லும்போது அவரது மனைவி, தீபாலி கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கனோர் மற்றும் தீபாலியின் 21 வயது மகன் சித்தாந்தை காணவில்லை.
கொலை நடந்த இடத்தில், இவர்களால் நான் சோர்வடைந்துவிட்டேன், என்னை பிடித்து தூக்கில் போடுங்கள் என இரத்தத்தால் எழுதப்பட்டு ஒரு ஸ்மைலி குறியீடும் வரையபட்டு இருந்தது.
இதனால் காவல் ஆய்வாளரின் மகன் சிந்தாந்த் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் தலைமறைவாகியுள்ள சிந்தாந்தையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து பொலிசார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட தீபாலியின் உடலில் 4 முதல் 5 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், அவர் செவ்வாய் இரவு 8 முதல் 9 மணிக்குள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் தீபாலியை யார் கொலை செய்தது என்று தெரியவில்லை என கூறினர்.