இந்துசமுத்திரத்தின் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது மோரா சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கியதால் சுமார் 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோரா சூறாவளியானது சிட்டாகொங் நகரத்திலிருந்து தெற்கு-தென்மேற்காக 630 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலைகொண்டிருந்த நிலையில் நேற்று அமைதியாக தென்கிழக்கு பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூறாவளியின் அபாய அளவு 10ஐ தொடவே, சுமார் 10 இலட்சம் மக்கள் உடனடியாக பாதிப்பு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளி பட்டியலின் பிரகாரம் தற்போதைய சூறாவளியானது, தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா (MORA) எனும் பெயரில் அழைக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சூறாவளியானது தற்போது மணித்தியாலத்திற்கு 180 கிலோ மீற்றர் வேகத்தில், பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் குறித்த பிராந்தியத்தில் அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த மைய செய்தி தொடர்பாளர் அபுல் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மோரா சூறாவளியின் காரணமாக கனமழை பெய்து வருவதாகும் குறித்த அனர்த்த நிலைமைகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடருமென சர்வதேச வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு குறித்த சூறாவளியினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக இந்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் தீவுகளிலும் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.