கடந்தாண்டு சிரியா போரில் உலக மக்கள் கவனத்தை திசை திரும்பிய சிறுவன் தற்போது தன் பெற்றோருடன் சந்தோஷமாக வாழும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
கடந்தாண்டு சிரியாவில் நடந்த போரின் போது அலெப்போ நகரை மீட்க அரசின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. இதனால் அலெப்போ நகரம் போர்க்களமானது. அந்தச் சூழலில் குவாட்ரிஜ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது ஓம்ரான் தக்னீஷ் என்ற சிறுவனை ராணுவத்தினர் மீட்டனர். உடல் முழுவதும் தூசியுடன் தலையில் இரத்த காயத்துடன் அந்த சிறுவனம் மீட்கப்படும் வீடியோவும் அப்பொழுது பெரும் வைரலாக பரவியது.
சிரியாவின் கொடுர முகத்தை காட்டும் விதமாக இந்த வீடியோ அமைந்திருந்தது. இதை பார்த்த உலக மக்கள் ஏராளமானோர் இந்த சிறுவனுக்காக பிரார்த்தனை நடத்தினர். இந்நிலையில் தற்போது ஓம்ரான் நல்ல ஆரோக்கியத்துடன் தன் பெற்றோரோடு வசித்து வருகிறான். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்த மக்கள் தற்போது ஓம்ரானுக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.