ரஜினியின் புதிய படம் அறிவிக்கப்பட்டாலே... நாயகியர் உலகில் பெரும் பரபரப்பு ஆரம்பித்துவிடும். அவருடன் ஜோடியாக அல்லது சக நடிகையாக தோன்றும் அதிர்ஷ்டம் யாருக்கு என்ற கேள்வி எல்லார் மத்தியிலும் இருக்கும்.
த்ரிஷா போன்றவர்கள் பல முறை பகிரங்கமாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புக் கேட்டுப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.
ஆனால் ரஞ்சித் இயக்கிய கபாலியில் யாருமே எதிர்ப்பார்க்காத ராதிகா ஆப்தே நாயகியாக வந்தார்.
பலருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவே இல்லை. இவரா நாயகி... ஏகப்பட்ட நிர்வாண குற்றச்சாட்டுகள் இருக்கே என்றெல்லாம் முணுமுணுத்தார்கள். படம் வந்ததும், திருப்தியடைந்து விட்டார்கள்.
மீண்டும் இப்போது ரஞ்சித் இயக்கும் காலா கரிகாலன் படத்தில் நடிக்கிறார் ரஜினி. நாயகிகள் யார் என்று தெரிந்துவிட்டாலும், இவர்களில் ரஜினிக்கு ஜோடி யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் என இரு நடிகைகளுக்கு முக்கிய வேடங்களைத் தந்திருக்கிறார். இவர்களில் ஒருவர் ரஜினிக்கு காதலியாக, இன்னொருவர் மனைவியாக நடிப்பார்கள் எனத் தெரிகிறது. மனைவி வேடம்தான் ஈஸ்வரி ராவுக்கு என்கிறார்கள்.
ஈஸ்வரி ராவ் தமிழில் அறிமுகமான தெலுங்குப் பெண். முதல் படம் கவிதை பாடும் அலைகள் (1990). பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா மூலம் பிரபலமானவர்.
இவர்களைத் தவிர அஞ்சலி பாட்டீல் என்பவருக்கும் ஒரு முக்கிய வேடம் உள்ளதாம் படத்தில்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.