நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப், கைது செய்யப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் திலீப், மஞ்சு வாரியார், நடிகை பாவனா ஆகிய மூவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான், பாவனாவை மானபங்கப்படுத்த திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும் கேரளாவில் பேசப்பட்டது. இந்நிலையில் இதை மறுத்துள்ள பாவனா, ’இந்த வழக்கில் சமீபத்தில் நடந்த கைது நடவடிக்கை எனக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் திலீப்புடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் எங்களிடையே சில பிரச்சினைகள் உருவானதால் நட்பில் இருந்து விலகி விட்டோம். நான் அந்த நடிகருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. அது தவறான தகவல். அதுபோன்ற தொடர்புகள் எங்களுக்குள் இல்லை. அதே போல், இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு, போலீசாருக்கு நான் நன்றி தெரிவிப்பது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள காணொளி போலியானது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அனைவரும் இந்த நாட்டின் சட்டத்தின் கீழ்தான் இருக்கிறோம். குற்றம் செய்யாத ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது, எந்த குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்று மீண்டும் கூறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.