திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட உணவு குழாய் மாற்றப்பட்ட பின்னர் வீடு திரும்புவார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி கடந்த 7 மாதங்களாக சுகயீனம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன் தமிழரசு ஆகியோர் அப்போது உடனிருந்தனர். இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, கருணாநிதிக்கு பொருத்தப்பட்ட உணவு குழாயை மாற்றவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில மணிநேரங்களில் வீடு திரும்புவார் என கூறினார்.