நீதிமன்றில் மனுத்தாக்கல்உயர்நீதிமன்றம் கண்டனம்தாஜ்மகாலை சுற்றி உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரிய இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, அந்நாட்டு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு தாஜ்மகாலை அழிக்கப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
முகலாய மன்னர் ஷாஜகான், தன் காதல் மனைவி மும்தாஜ் நினைவாக 1631ஆம் ஆண்டு ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டினார்.
தாஜ்மகால், உலக அதிசயமாக திகழ்ந்து வருகிறது. ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக தாஜ்மகாலை அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் நிபுணர் எம்.சி.மேத்தா என்பவர், காற்று மாசு மற்றும் மரங்கள் அழிப்பில் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவின் அடிப்படையில், தாஜ்மகாலை சுற்றி உள்ள வளர்ச்சி பணிகளை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து டெல்லி வரையிலான 80 கி.மீ. தூரத்துக்கு கூடுதல் ரயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தாஜ்மகாலை ஒட்டி செல்லும் இப்பாதையில், தாஜ்மகாலை சுற்றி உள்ள 450 மரங்களை வெட்ட அனுமதிக்கக்கோரி, உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மத்திய அரசுக்கு எதிராக காட்டமான வார்த்தைகளை தெரிவித்தனர்.
'தாஜ்மகால், உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னம். அதை அழிக்கப் போகிறீர்களா? தாஜ்மகாலின் அண்மைய படங்களை பார்த்து இருக்கிறீர்களா? பார்க்காவிட்டால், இணையதளத்தில் போய் பாருங்கள்.
அதன்பிறகும் நீங்கள் விரும்பினால், தாஜ்மகாலை அழிக்க இந்திய அரசு விரும்புகிறது என்று பிரமாண பத்திரமோ, மனுவோ தாக்கல் செய்யுங்கள்' என்று அவர்கள் கூறியுள்ளனர்.