வாழ்க்கை கனவுகளால் நிரம்பிய அழகிய உலகம். ஆசைகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கையில் எங்கள் எல்லோரதும் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறுகின்றதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே நிதர்சனம். என்றாலும் ஆசைப்படும் மனது தன் ஆசைகளை நிறுத்திக்கொள்கிறதா என்றால் இல்லை. எதிர்பார்ப்புக்காளால் தோற்றாலும் எதிர்பார்ப்புக்கள் குறையாத இவ்வுலகில் தகர்க்கப்பட்ட மனக்கோட்டையின் சுவடுகளை சுமந்து வருகிறது இந்தப் பதிவு
எங்கள் கதையின் நாயகன் சுரேன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சொந்த இடம் யாழ்ப்பாணம்(மாற்றப்பட்டுள்ளது). யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையொன்றில் சிற்றுண்டிச்சாலை ஒன்றினை நடத்திவரும் இவர் அழகிய தோற்றம் கொண்ட இளைஞர். இவரது அழகிய தோற்றத்தினால் இவர்மீது ஏராளமான பெண்கள் காதல் வயப்பட்டாலும், இவர் ஈர்க்கப்பட்டதோ அனுஷியாவின் வசம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுஷியா அதே பாடசாலையில் உயர்தரம் கற்கின்ற மாணவி யாழ்ப்பாணத்திலிருந்து சற்று தொலைவிலிருந்த வேறொரு பாடசாலையிலிருந்து உயர்தரம் கற்பதற்காக இந்த பாடசாலைக்கு வந்த அனுஷியா பாடசாலைக்கும் தனது வீட்டுக்கும் இருந்த தூரம் காரணமாக சுரேனின் இல்லத்திலேயே இல்லத்தில் வாடகைக்கு தங்கியிருந்தே கற்றலில் ஈடுப்பட்டாள். மாநிறம் அழகிய தோற்றம் கண்டதும் யாரையும் கவரும் தன்மைகொண்ட அவள் மீது காதல் வயப்பட்டான் சுரேன். இதே நிலைமைதான் அனுஷ்யாவிற்கும், சந்தித்துக்கொண்ட சிறிது காலத்திலேயே இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தார்கள். ஆரம்பத்தில் அனுஷியாவின் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு வந்தாலும் அனுஷியாவின் உறுதி அவர்களையும் ஒத்துக்கொள்ள வைத்தது. இருவரது வாழ்வும் இரண்டாண்டுகள் மகிழ்ச்சியாய் கழிந்தது. பரிசாய் ஒரு ஆண் குழந்தை. அந்த சந்தர்ப்பத்தில் தான் அனுஷியாவிற்கு உயர்கல்விக்கான வாய்ப்பொன்று கிடைக்கிறது. சுரேனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. குடும்பத்தினரிடம் அனுமதிப்பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்கிறாள் அனுஷியா. இரண்டாண்டுகள் கொண்ட கற்கைநெறி குழந்தையை விட்டு பிரிந்துசெல்ல அனுஷியா முதலில் தயங்கினாலும் சுரேன் நம்பிக்கையூட்டி அனுப்பிவைக்கிறான். அதன் பின்பு சுரேனின் பணிச்சுமை அதிகரிக்கிறது. அனுஷியாவின் கல்வி நடவடிக்கைகளுக்காக அதிகமாக உழைக்கவேண்டிய அதே நேரம், குழந்தையையும் அவனே பார்த்துக்கொள்கிறான். கடல்கடந்து சென்ற அனுஷியா. தனிமையிலும் குடும்பநினைவிலும் தவிக்கும்போதுதான் ராகவனை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்திக்கிறாள். ராகவன் அதே கலாசாலையில் கல்விகற்பதற்காக வந்திருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன். ஒரே நாடு என்பதால் இருவரும் நண்பர்களாகின்றார்கள். இந்த நட்பு யாருமே எதிர் பார்க்காதவகையில் காதலாகி போனதுதான் துரதிஷ்டம். இரண்டாண்டுகள் இவர்களுக்கிடையில் இருந்த உறவும் நட்பும் சுரேனின் குடும்ப வாழ்வினை சீர்குலைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அனுஷியா சுரேனை விட்டு விலக ஆரம்பிக்கிறாள். வெளிநாடு சென்ற ஆரம்பத்தில் அவனோடு பேசுவதற்காகவே அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்ட அவள், இப்போதெல்லாம் அவன் தொடர்புக்கொண்டாலும் பேசுவதை குறைத்துக்கொண்டாள். என்றாலும் சுரேன் அவளின் மீது சந்தேகம் கொண்டதில்லை வேலைப்பளு காரணமாகவே அவள் இவ்வாறு நடந்துக்கொள்கிறாள் என்றெண்ணி தன்னை தேற்றிக்கொண்டான். இப்படியே இரண்டாண்டுகள் உருண்டோட அனுஷியா நாடு திரும்புகிறாள். தன்னை மட்டுமே நேசிக்கிற தன் காதல் மனைவி நாடுதிரும்புகிறாள் என்பதே சுரேனுக்கு கொள்ளை சந்தோசம். ஆவலோடு காத்திருந்த அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்த காதல் மனைவியல்ல இப்போது அவன் முன்பிருப்பது, முற்றிலும் மாறிப்போயிருந்தால் அனுஷியா. தன்னை நேசித்த, தான் உயிராய் நேசித்த அனுஷியா தன்னை வெறுப்பதைக் கண்டு உருகுலைந்துபோன சுரேன் அதற்காக அவள் சொன்ன காரணங்களை கேட்டபோதுதான் திகைத்துப்போனான்.
ஆம் அதற்கு அவள் சொன்ன காரணமோ அவன்மீது அவனுக்கே வெறுப்பை உண்டாக்கியது. பாடசாலையில் கல்வி கற்றப்போது தன்னை மட்டுமே நேசித்த அனுஷியா. இப்போது தன்னோடு வாழ்வது தரக்குறைவென நினைக்கிறாள் என எண்ணும்போது அவன் செத்தேபோனான். தன் தொழில்தான் அவளுக்குப் பிரச்சனை என எண்ணிய சுரேன் இத்தனை காலமாக தன்னையும் தன் குடும்பத்தையும் வாழவைத்த தொழிலையும் துறக்க முடிவெடுத்தாலும். சிறிது காலத்துக்குப் பின்னரே அதன் உண்மையான காரணம் தெரிந்து அதிர்ந்துப்போனான் சுரேன். என்றாலும் அனுஷியாவை சமாதானப்படுத்தி தன்னோடு வாழவைத்துவிடலாம் என்று முயற்சித்த சுரேனுக்கோ மிஞ்சியது ஏமாற்றமே.
இறுதியில் விகாரத்து கோரிநின்ற அனுஷியாவிற்கு விவாகரத்து வழங்குவதென முடிவெடுத்தான். வழக்கு விசாரணைக்கும் வந்தது. அனுஷியாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்த சுரேனுக்கு ஆறுதலாக இருந்த அவனது செல்ல மகனையும் பறித்துக்கொண்டாள் அனுஷியா. அதன் பின்னர் ராகவனை மறுமணம் செய்துகொண்ட அனுஷியா தன்மகனையும் தன்னோடு கூட்டிச்செல்ல, கட்டிய மனைவியும் பெற்றெடுத்த பிள்ளையும் இல்லாது தனிமரமாய் தவிக்கிறான் சுரேன். காதல் என்ற அழகிய கனவுகள் தந்த தன் காதலியின் பிரிவினால் மதுவின் துணையோடு வாழும் சுரேனுக்கு ஆறுதல் தந்தது சூரியனின் இதயத்தோடு இதயம்.
காதலுக்கு கண்கள் இல்லையென்று சொன்னதாலோ என்னவோ எல்லோரும் கண்களை மூடிக்கொண்டே காதலிக்கிறார்கள். தூக்கம் விழிக்கிறபோது கலைகிற கனவுபோல சிலரது காதலும் மறைந்துபோகிறது. காதல் இது குலையாமல் இருப்பதால்தான் பூமி இன்னும் சீராய் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் இயல்பாய் இருந்திட இதயங்கள் புனிதமாய் இருக்கட்டும் பூமியில். இப்படிக்கு சூரியனின் இதயத்தோடு இதயம்.
அழையுங்கள் 0112346744 , அல்லது 0114799760, 0114799750 இலக்கங்களுக்கு. இதயத்தோடு இதயம் "எந்தன் சப்தமும் உங்கள் நிசப்தமும் சந்திக்கும் புள்ளியில் உங்கள் வேதனைகளுக்கு ஆறுதல் தேடும் முயற்சி" மீண்டும் சந்திப்போம்