விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வழக்கு மீதான இறுதி தீர்ப்பு ஒக்டோபர் 6 ஆம் திகதி வெளியாக உள்ளது.
தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்... என சாதனை மேல் சாதனை படைத்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை மேல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில், ஏ.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் "மெர்சலாயிட்டேன்" என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன்.
இதற்கான தலைப்பை 2014-ம் ஆண்டிலே பதிவு செய்திருக்கிறேன். தற்போது அந்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
ஆகவே, மெர்சல் படத்தின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை மெர்சல் படத்தின் விளம்பரத்தில் மெர்சல் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று(4) வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மெர்சலுக்கான தற்போதைய தடை நீடிக்கப்படுவதாக கூறி, வழக்கின் இறுதிக்கட்ட தீர்ப்பு ஒக்டோபர் 6 ஆம் திகதி வழங்குவதாக கூறி விசாரணையை அன்றைய திகதிக்கு ஒத்தவைத்து உத்தரவிட்டது.