புதுமுக இயக்குனர் மதுராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ளது "தொட்ரா" திரைப்படம். ஜே.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிக்க, இந்த கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா-2’வுக்கு இசையமைத்த உத்தமராஜாவின் இசையில் இந்தப்படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜினின் மகன் பிருத்விராஜன் நாயகனாகும் இந்தப் படத்தில், வீணா என்கிற புதுமுக நடிகை நாயகியாக ஜோடிசேருகிறார். முக்கியமான வேடமொன்றில் குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகின்றார். இவர்களுடன், வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் தயாரிப்பாளர் ஜெய் சந்திராவின் கணவர் எம்.எஸ்.குமார். இவரும் திரையில் முகம் காட்டும் முதல் படம் இது என்கிறார்கள் படக்குழுவினர்.
படம் பற்றிய விபரங்கள் இப்படியிருக்க, நாயகியாக நடிக்கும் மலையாள நடிகை வீணாவை இயக்குனர் மதுராஜ் கைநீட்டி அடித்த சம்பவம் ஒன்றும் நடந்திருக்கின்றது. இது பற்றி இயக்குனர் கூறும்போது "அவரை தான் அடித்தது உண்மை தான். ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் அதன் சீரியஸ்னெஸ் உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாக இருந்ததால் கிட்டத்தட்ட 30 டேக்கிற்கு மேல் படமாக்கியும் எதிர்பார்த்தபடி காட்சி சிறப்பாக அமையவில்லை. அதனால் ஒருகட்டத்தில் கோபம் வந்து அவரை அடித்தும் விட்டேன். மற்றபடி படம் முழுதும் நன்றாக நடித்துள்ளார் வீணா" என்று கூறினார்.
இதேவேளை, படத்தின் இசையமைப்பாளர் உத்தமராஜா பேசும்போது, “இந்தப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். இதில் ‘பக்கு பக்குங்குது’ என்கிற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்தப்பாடலை இயக்குநர் மதுராஜ் எழுதியுள்ளார். உண்மையிலேயே சிம்புவை பாட வைக்கும் வரை எனக்கு பக்கு பக்குன்னு இருந்தது. ஆனால் ஒரு புது இசையமைப்பாளர் என ஒதுக்காமல், பாடல் பிடித்திருந்ததால் பெருந்தன்மையுடன் பாட ஒப்புக்கொண்டார் சிம்பு” என்று நன்றி உணர்வுடன் சிம்புவை பெருமைப்படுத்தினார்.