திரைப்படங்களில் எத்தனை பன்ச் வசனங்கள் பேசப்பட்டாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வசனங்கள் இன்றைய தலைமுறைகளாலும் அதிகமாகவே வரவேற்கப்படுகின்றன.
குறிப்பாக `பாட்ஷா' படத்தில், “நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்னா மாதிரி!" என அவர் உச்சரிக்கும் பன்ச் வசனம், ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் “நேனு ஒக சாரி செப்த்தே வந்த சாரிலு செப்பினட்டே!" என்ற வசனத்தை உச்சரிக்கும்போது அந்த வார்த்தைகளுக்கே உரிய மவுசு நெருப்பாகத் தெறிக்கும்!
16 வயதினிலே' படத்தில் பரட்டை பாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த், காந்திமதியைக் கலாய்த்தபடி கிண்டல் செய்துவிட்டு, முடிவில் “இது எப்படி இருக்கு?" எனக் கேட்டு நக்கலடிப்பதும், அவரைப் பார்த்து கவுண்டமணி சொல்லும் “பத்தவெச்சிட்டியே பரட்ட..!" என்ற இந்த இரண்டு வசனங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன.
அதேபோல, `மூன்று முகம்' படத்தில், “தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாத்தான் தீ பிடிக்கும். இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்!" என்று நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த், `குரு சிஷ்யன்' படத்தில் “நான் சொல்றதத்தான் செய்வேன்... செய்றதத்தான் சொல்வேன்!" என்ற வசனங்களை பேசி அதிகமான ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளார்.
`படையப்பா' படத்தில் வரும் நீலாம்பரி பாத்திரம் யார் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படியிருந்ததால்தான் பெண்ணியத்துக்கு எதிரானதாகக் கருதக்கூடிய, “அதிகமா கோபப்படுற பொம்பளையும், அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!" என்ற வசனமும், ``பொம்பளைன்னா பொறுமை வேணும்! அவசரப்படக் கூடாது! மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்!" என்ற வசனம் தமிழ் பாரம்பரிய பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வசனமாக ரசிகர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு வலுக்கத் தொடங்கியதுமே, பன்ச் வசனம் இல்லாமல் இவரது படமே கிடையாது என்ற சூழலுக்கு வந்தது. இவர் ஒரு படத்தைத் தொடங்கியதுமே அந்தப் படத்தில் என்னென்ன பன்ச் வசனங்கள் இடம்பெறும் என்று போட்டிகளே நடத்தப்பட்டன!
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரின் பிம்பம், அவரது ரசிகர்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் சற்றும் மவுசு குறையாமல் இருக்கிறது என்றால், அவரது பன்ச் வசனங்களின் பயன்பாடும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
அத்தகைய ஜாம்பவானின் பிறந்தநாளில் அவரை பற்றி நினைவு கூறுவது எமக்கும் கொஞ்சம் கெத்து தான்...