சனிப் பெயர்ச்சி பலன்கள்-சிம்மம்மனிதநேயமும் மண்ணாளும் யோகமும் தவறுகளை தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 5ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சமாகி வலுவடைவதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விடாமல், ஏமாற்றங்களையும், அலைக்கழிப்புகளையும் சந்தித்தீர்களே, நிலையான ஒரு இடமில்லாமல் அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருந்தீர்களே! தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போனதே, அதுமட்டுமில்லாமல் அவருடன் கருத்து மோதல்களும் வெடித்ததே, உத்யோகத்திலும் அசிங்கப்பட்டீர்களே!
இனி அந்த அவல நிலை மாறும். ஏதாவது முக்கியமான காரியத்திற்கு செல்லும்போது தான் வண்டி கூட தகராறு செய்யுமே, அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் போகாததால் சில வாய்ப்புகளைக்கூட தவற விட்டீர்களே, அடிக்கடி வாகன விபத்துகளையும் சந்தித்தீர்களே. வீட்டில் நுழைந்தாலே சண்டை சச்சரவாக இருந்ததே, இப்படி பல்வேறு நிலைகளில் உங்களை உருக்குலைய வைத்த சனி பகவான் இப்போது உங்களின் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்து பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தாயாரின் புலம்பல் குறையும். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்று போனதே, இனி பணவரவு அதிகரிக்கும். வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் கோலாகலமாக செய்வீர்கள். உங்களை கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள்.
கணவன் - மனைவிக்குள் சாதாரணமாக பேசினாலே சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி மணிக்கணக்கில் பேசினாலும் மனவருத்தம் ஏற்படாது. நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி கோயில் குளமென்று சுற்றி சுற்றி ஒரு பலனுமில்லாமல் போனதே, இனி கவலை வேண்டாம். 5ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள் தொலை தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாலைகளை கடக்கும் போது நிதானம் தேவை. அலைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்:
சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இடம்பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அக்கம்பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். சிலசமயங்களில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். ஆகவே அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் இருந்ததல்லவா, இனி அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார். மார்க்கெட்டில் புதிதாக வந்த வாகனத்தை வாங்குவீர்கள்.
சனிபகவானின் நட்சத்திரப் சஞ்சாரப் பலன்கள்:
19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் சொத்து சேர்க்கையுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. பூரம், உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நல்ல பலன்கள் உண்டாகும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும் யோகாதிபதியுமாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால்வீடு,வாகனம் வாங்குவீர்கள். விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள்.
பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். சொந்த பந்தங்கள் வியக்கும்படி நடந்துகொள்வீர்கள். மகம், உத்திரம் 1ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிநாதனாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்சனைக்கு தீர்வு கிட்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். ஆனால் மகம், உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. எந்த செயலிலும் அலட்சியம் வேண்டாம். ஆனால் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும்.
சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:
29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் மூத்த சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்சனை தலைதூக்கும். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். ஆனால் ஆரோக்யம் மேம்படும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் வீண் செலவுகளும், அலைச்சல்களும் வரக்கூடும். எடுத்த வேலைகளை இழுபறிக்குப் பின்னரே முடிக்க வேண்டி வரும். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் செல்வாக்கு, புகழ், கூடும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும்.
அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொண்டு கொள்முதல் செய்யப்பாருங்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். ஏற்றுமதி இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. ஏஜென்சி,புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மற்றவர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிட்டதே, இனி அந்த அவல நிலை மாறும். உங்கள் திறமையை குறைத்து எடைபோட்டார்களே! இனி அதிகாரிகளே ஆச்சரியப்படும்படி சில கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக்காட்டுவீர்கள்.
சக ஊழியர்களும் உங்களின் செல்வாக்கை நினைத்து நட்புறவாடுவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். துறை மாறிப் பணியாற்றியவர்களுக்கு படிப்புக் கேற்ற வேலை கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் தவித்தீர்களே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வரக்கூடும். நாட்டமில்லாமல் இருந்து வந்த உயர்கல்வியில் இனி ஆர்வம் பிறக்கும். மாணவமாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சு குறையும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பதக்கம் உண்டு.கலைத்துறையினர்களே! நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகள் வெளிப்படும். பெரிய கலைஞர்கள் உங்களை பாராட்டிப் பேசும் அளவிற்கு உயர்வீர்கள்.இந்த சனிப்பெயர்ச்சி தடுமாற்றம், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுவிப்பதுடன் புதிய பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.
பரிகாரம் :செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள திருமலைவையாவூர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.