கறிவேப்பிலையில் வைட்டமின் ‘ஏ’, இரும்பு, தாமிர, கந்தகச் சத்தும், கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இதில் கோனிகின் எனும் ஒருவகை மரப்பிசினும் உண்டு.
காம்புகளிலும், இலைகளிலும் சிறிது சாம்பல் உப்பு இருக்கும். கறிவேப்பிலையின் இலைகள், பட்டை மற்றும் வேர் முதலிய பகுதிகள் பசி தூண்ட, வெப்பமுண்டாக்க பயன்படுத்தப்படுகிறது. பசும் இலைகளிலிருந்து எண்ணெய் வடித்தெடுக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் அழகுசாதனப் பொருட் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். கறிவேப்பிலையை வறுத்து உட்கொண்டால் வாந்தியைத் தடுக்கலாம். கொப்புளங்களுக்கும் விஷக்கடிகளுக்கும் தடவு மருந்தாக, மேல் பூச்சாக உபயோகிக்கலாம். சீதபேதிக்கு தளிர் இலையைத் தயிருடன் உட்கொள்ளலாம். கசக்கிய இலைகள் பற்றாக தோல் வீக்கங்களில் பயன்படுத்தலாம். தலைமுடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலையை பச்சைப் பயறுடன் கலந்து ஸ்நானப் பொடியாகப் பயன்படுத்தலாம். கறிவேப்பிலை 2 கைப்பிடியுடன் கசகசா 9 கிராம், கஸ்தூரி மஞ்சள் 4 கிராம் அனைத்தையும் சேர்த்து மையாக அரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங் கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும். வல்லாரைக்கு உள்ள குணங்கள் இதற்கும் உண்டு.
ஞாபகசக்தியை பன்மடங்கு விரிவு படுத்துவது போல, இம்மூலிகையும் சக்தியைத் தூண்டிப் பெருக்கும். நன்றாக முற்றிய கறிவேப்பிலை 100 கிராமுடன் சுக்கு 25 கிராம், கடுக்காய் உலர்ந்த தோல் இவற்றை நன்றாக உலர்த்தி பொடியாக்கி இந்த பொடியைத் தேவைக்கேற்றவாறு வெந்நீரில் கலக்கி குடித்து வந்தால் அழிந்து போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசி இல்லா நாக்கில் ருசியை ஏற்படுத்திக் கொடுக்கும். வாத பித்தங்கள் உடலில் ஒளிந்து கொண்டிருந்தால் அவை விடுபட்டு மறைந்து விடும். வளரும் குழந்தைகளுக்கும் வலுக்குறைந்த பெரியோர்களுக்கும் இரும்புச் சத்தை இழக்கும் பெண்களுக்கும் கறிவேப்பிலை சிறந்த சத்துணவு.
தொற்று நோய்களை எதிர்க்கும் சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு. இரத்தத்தைச் சுத்தம் செய்யும் திறன், புண்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக வாய்ப் புண்களைக் குணப்படுத்தும். பல் ஈறுகளை வலுப்படுத்தும். வைட்டமின் ‘சி’ ஊட்டச்சத்து, இரத்த சோகையை விரட்டியடிக்கும் பாலிக் அமிலம் எனும் உயிர்ச்சத்து இதில் அடங்கியுள்ளது. தலைமுடியின் வளர்ச்சிக்கும் வனப்புக்கும் உதவும் ஊட்டச்சத்துகள் கறிவேப்பிலையில் நிறைய உண்டு. கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும். ஜீரணத்திற்கு உதவும் சிறந்த மருந்தாக இந்த இலை பயன்பட்டு வருகிறது.
இந்த இலை தனித்தும், பிற பொருள்களோடு சேர்ந்தும் நம் நோய்களை போக்குகிறது. பசும் இலைகளிலிருந்து நீராவி அழுத்தத்தில் தைலம் வடித்தெடுக்கப்படுகிறது. இத்தைலம் குளியல் சோப்புகளில் சேர்க்கப்படும் நறுமணங்களை நிலைக்க செய்ய பயன்படுகிறது. கறிவேப்பிலைப் பழங்களில் இருந்தும் தைலம் வடிக்கப்படுகிறது. முகத்திலுள்ள அம்மைத் தழும்பினை போக்க கைப்பிடி கறிவேப்பிலையுடன், கசகசா 15 கிராம், கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், இவற்றை மை போல அரைத்து முகததில் கனமாகப் பூசி கால் மணி நேரம் ஊறவைத்து பின் வெந்நீர் கொண்டு கழுவி விட வேண்டும்.
இவ்விதம் காலை, மாலை இரு வேளை செய்யப் படிப்படியாக தழும்பு மறைந்து விடும். தைலம் காரச் சுவையும், அழுத்தமான நறுமணமும் கொண்டிருக்கும். நாட்டு மருந்து வகைகளில் கறிவேப்பிலைச் செடியின் இலைகள், பட்டை மற்றும் வேர் முதலிய பகுதிகள் பசி தூண்ட பயன்படுத்தப்படுகிறது. கறிவேப்பிலை மரத்தின் மலர்கள் வெண்மையாக இருக்கும். பின்னர் இது பச்சை நிறமுள்ள காய்களாகக் காய்க்கும். காய்கள் கரிய நிறமுள்ள கனியாக மாறி கீழே உதிர்ந்துவிடும். இந்த கனியினுள் கனத்த உறையுடன் கூடிய விதைகள் இருக்கும். அழகிய கரிய கூந்தலுக்கு கறிவேப்பிலை உத்தரவாதம் தரும் எளிய மருந்தாகும்.