புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை அறிந்தவர்களே தினமும் அதனை பயன்படுத்துகின்றனர். உலக அளவில் புற்று நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் தற்போது புகை பிடிப்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் முடிவு வெளியாகியுள்ளது.தினமும் ஒரேயொரு சிகரெட் பிடித்தாலேயே இருதயம் பல விதமான நோய்களால் பாதிப்படையும் என குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியவர்கள் அதனை கைவிட முடியாமல் தினமும் ஒரு சிகரெட்டாவது பிடித்து வருவது வழக்கமாகி விட்டது. தினமும் அதிகளவு சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டு, ஒரு சிகரெட் பிடித்தால் எந்தவித தீங்கும் விளையாது என வாதிடுபவர்களுக்கு இந்த ஆய்வு பொருத்தமாக இருக்கும்.
1946 முதல் 2015 ஆம் ஆண்டு வரை படிப்படியாக நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.தினமும் ஒரு சிகரெட் பிடிக்கும் ஆண்களில் 48 சதவிகிதமானோரும், பெண்களில் 57 சதவிகிதமானோரும் இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் ஆண்களில் 25 சதவிகிதமானோரும் பெண்களில் 31 சதவிகிதமானோரும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.