சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். போட்டிகள் நடக்க இருப்பதாலும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களம் இறங்குவதாலும் கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்றைய முதல் நாள் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் விவசாய சங்கத்தினர், சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை மீறி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஐ.பி.எல். போட்டியின் போது ஏதேனும் இடையூறு செய்தால், அதன் மூலம் தேசிய அளவில் காவிரி பிரச்சினை பற்றிய கவனத்தைப் பெற முடியும் என்று சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள நியாயமான உரிமையைப் பெற இத்தகைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன. இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பொலிஸார் செய்துள்ளனர்.
ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து போட்டியை பார்க்க முடியும். ஆனால் கடைசி நிமிடத்தில் ஸ்டேடியம் அருகே கூடுதல் விலைக்கு டிக்கெட் பெற முடியும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள்.
எனவே இன்று மாலை சுமார் 50 ஆயிரம் கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிய வாய்ப்புள்ளது. இந்த 50 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டக்காரர்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.